மேற்கு ஐரோப்பிய பிராந்தியங்களை உலுக்கி வரும் கடுமையான முன்கூட்டிய கோடைகால வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா (UK) ஆகிய நாடுகள் மே மாதத்தில் தங்களின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான வெப்பநிலையைப் பதிவுசெய்துள்ளன.
இது குறித்து பிரான்ஸ் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மோட் பிரேஜியன் (Maud Bregeon) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், "வெப்ப அலையின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஐந்து மரணங்கள் நீரில் மூழ்கியதால் (Drowning) ஏற்பட்டுள்ளன" என உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தென்மேற்குப் பகுதியான 'ஹொசெகோர்' (Hossegor) பிரதேசத்தில் அதிகபட்சமாக 37.1 டிகிரி செல்சியஸ் (37.1°C) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிரான்சில் வானிலை தரவுகள் பதியப்படத் தொடங்கிய காலத்திலிருந்து மே மாதத்தில் பதிவான மிக வெப்பமான நாளாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 1944 ஆம் ஆண்டில் பதிவான 23.7°C என்ற தேசிய சராசரி வெப்பநிலை சாதனையை முறியடித்து, தற்போது 24.4°C என்ற புதிய தேசிய சராசரிப் பதிவு எட்டப்பட்டுள்ளது.
லண்டனின் 'கியூ கார்டன்ஸ்' (Kew Gardens) பகுதியில் மே மாதத்திற்கான மிக உயர்ந்த வெப்பநிலையாக 34.8°C பதிவாகியுள்ளது. இது நடுக்கோடைகாலத்தில் பதிவாக வேண்டிய அசாதாரண வெப்பநிலை என அந்நாட்டு வானிலை மையம் விவரித்துள்ளது.
நாட்டின் முக்கிய பள்ளத்தாக்கு பகுதிகளில் வெப்பநிலை 36°C முதல் 38°C வரை பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் இது 40°C ஐத் தொடக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரோம் நகரம் உள்ளடங்கிய லாசியோ (Lazio) பிராந்தியத்தில், கடுமையான வெயில் காரணமாக விவசாயம், கட்டுமானம் மற்றும் விநியோகத் துறை (Delivery Sector) ஊழியர்கள் மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நேரடியாக வெயிலில் வேலை செய்வதற்குப் பிராந்திய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பிரான்சில் நிலவிய கடுமையான உஷ்ணம் காரணமாக, லியோன் நகரில் நடைபெற்ற உடற்தகுதிப் போட்டியொன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் கடுமையான உடல் வெப்பம் (Hyperthermia) காரணமாகவும், பாரிஸில் நடைபெற்ற 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 53 வயது நபர் ஒருவர் மாரடைப்பு (Heart Attack) காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற மற்றுமொரு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 16 பேர் கடுமையான உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்பத்தைத் தணிப்பதற்காகப் பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் ஆறுகளை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், வார இறுதியில் மட்டும் மூன்று பதின்ம வயது (Teenagers) சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.
பிரான்சின் 96 நிர்வாக மாவட்டங்களில் 8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' (Orange Alert) எச்சரிக்கையும், மேலும் 20 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் 2004 ஆம் ஆண்டு வெப்ப எச்சரிக்கை கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மே மாதத்தில் இவ்வெச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவ்வதீத வெப்பநிலைக்கு மொராக்கோவிலிருந்து வீசும் வெப்பக் காற்றானது உயர் அமுக்கப் பிராந்தியத்திற்குள் சிக்கிக்கொண்டமையால் உருவான 'ஹிட் டோம்' (Heat Dome) என்ற காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
புவி வெப்பமயமாதல் (Climate Breakdown) காரணமாக ஐரோப்பாவில் ஜூன் மாதத்தில் இவ்வாறான வெப்ப அலைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொழிற்புரட்சிக் காலத்தை விட தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் இத்தகைய ஆபத்தான வெப்ப அலைகளை எதிர்கொள்ள நேரிடும் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.