சர்வதேச நாணய நிதியத்துக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதி!

சர்வதேச நாணய நிதியத்துக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதி!

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் 'டிட்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தத் தற்காலிக நிவாரணங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி இலக்குகளை எட்டக்கூடியதாக இருந்தால் மட்டுமே 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தினூடாக மேலதிக உதவிகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான நாணய நிதியத்தின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை இலங்கைக்கு கிடைத்துள்ள மொத்த நாணய நிதிய உதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. அண்மைய அனர்த்தங்களால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025இல் 5%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2026இல் 3%ஆகக் குறையும் என நாணய நிதியம் கணித்துள்ளது.

தற்காலிக பின்னடைவுகள் காணப்பட்டாலும், 2027ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% முதன்மை உபரி இலக்கை எட்டுவது உள்ளிட்ட கடுமையான நிதி மறுசீரமைப்புகளை இலங்கை தொடர வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.