ஹோர்முஸ் நீரிணையில் மனிதாபிமான பாதையை உருவாக்கக் கோரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் மனிதாபிமான பாதையை உருவாக்கக் கோரிக்கை!

ஈரான் போரினால் தத்தளிக்கும் உதவிப் பொருட்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதைக் காலதாமதப்படுத்தியுள்ளது அல்லது தடுத்துள்ளது.

போக்குவரத்துச் செலவுகள் விண்ணைத் தொட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக ஒரு "மனிதாபிமான பாதையை" (Humanitarian Corridor) திறக்குமாறு சர்வதேச உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச மீட்புக் குழுவின் (IRC) 130,000 டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் துபாயில் முடங்கியுள்ளன. இது சூடானில் உள்ள 20,000 மக்களுக்குத் தேவையான மருந்துகளாகும்.

நைஜீரியா மற்றும் எத்தியோப்பியாவில் அரசாங்கம் எரிபொருளைப் பங்கீடு செய்துள்ளதால், மருத்துவமனைகளில் மின்பிறப்பாக்கிகளை (Generators) இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"நிலைமை நீடித்தால், முக்கியமான பிரிவுகளை மட்டும் இயக்க ஏனைய பிரிவுகளுக்கான மின்சாரத்தை நிறுத்த வேண்டியிருக்கும்" என IRC அதிகாரி பொப் கிட்சன் எச்சரித்துள்ளார்.

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 5 டொலர் அதிகரிக்கும் போது, 'Save the Children' அமைப்பிற்கு மாதாந்தம் மேலதிகமாக 340,000 டொலர் செலவாகிறது.

2026ஆம் ஆண்டின் இறுதிவரை எண்ணெய் விலை 100 டொலராக நீடித்தால், இந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மாத்திரம் மேலதிகமாக 27 மில்லியன் டொலர்கள் தேவைப்படும்.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) படி, இந்த மோதலினால் மேலதிகமாக 45 மில்லியன் மக்கள் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏற்கனவே பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் 318 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கப்பல் போக்குவரத்துச் செலவு 20% அதிகரித்துள்ளதோடு, உணவுப் பொருட்களின் விலை 30% உயர்ந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருந்துகளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஹோர்முස් நீரிணையைத் தவிர்க்க, துபாயிலிருந்து வீதி வழியாக ஏழு நாடுகளைக் கடந்து உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்கு சாதாரண நேரத்தை விட மூன்று வாரங்கள் மேலதிகமாகத் தேவைப்படுவதால் ஆப்கானியக் குழந்தைகள் பசியால் வாடுகின்றனர்.

வழமையாக இந்தியாவிலிருந்து ஓமான் வழியாக சூடானுக்குச் செல்லும் கப்பல்கள், இப்போது ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை (Cape of Good Hope) சுற்றி மத்திய தரைக்கடல் ஊடாகச் செல்கின்றன.

இது பயணத் தூரத்தை 9,000 கி.மீ அதிகரிப்பதோடு பல வாரங்கள் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது.

உலகின் விதை மற்றும் உரத் தேவையில் 45% ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.

சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விவசாயச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும் என மெர்சி கோப்ஸ் (Mercy Corps) அமைப்பு எச்சரித்துள்ளது.