மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 80களில் இலங்கையில் அரங்கேறிய கொலைக் கலாசார வன்முறைகள்தான்.
அன்றைய காலகட்டத்தில் பாரபட்சமின்றி அனைவரையும் கொடூரமாகக் கொன்றொழித்தவர்கள்தான் தற்போதைய இலங்கையின் ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி. ஈவிரக்கமின்றிப் பலரைக் கொலைசெய்த குற்றச்சாட்டுகள் இன்னமும் இருக்கின்றன.
அப்படிப்பட்ட அயோக்கியர்களைத்தான் தற்போதைய அரசியல் நீரோடையில் இலங்கை மக்கள் உள்வாங்கி, நாட்டைக் கையளித்திருக்கிறார்கள்.
பழையதை மறந்து, ஜனநாயக நீரோடைக்குள் புகுந்ததால், மக்களும் அவர்களை வெகுவாக ஆதரித்தனர். ஆனால், தற்போதைய ஆட்சிக்காலத்தில் பல முக்கியஸ்தர்கள் மர்மமான முறையில் மரணங்களைத் தழுவியிருக்கிறார்கள்.
அண்மைக்காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இலங்கைத் திறைசேரி நிதிப்பரிமாற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொண்ட பிரதிப் பணிப்பாளர் ரங்க நிஸாந்த ராஜபக்ஷ, தனது இல்லத்தில் மர்மமான முறையில் கத்தி வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
பிரேத பரிசோதனைகள் இதைத் தற்கொலையெனக் குறிப்பிடுகின்றபோதிலும், அவரது மரணத்தில் மர்மம் இருக்கத்தான் செய்கிறது. நிலமை இவ்வாறிருக்கையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஸ்ரீலங்கள் விமான சேவைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பில் பிரதான சந்தேகநபராகவும், அதேவேளை அந்த ஊழலின் பின்னாலிருந்த அரசியல் சக்திகளுக்கு எதிரான மிக முக்கியமான சாட்சியாகவும் இருந்த ஒருவரின் இந்த மர்ம மரணம், தற்செயலானது என்று கடந்து செல்ல முடியாதுள்ளது.
2013ஆம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து 14 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் தரகுப்பணம் கைமாறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளின் போது, குறித்த தரகுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்குத் தான் நேரடியாக வழங்கியதாகக் கபில சந்திரசேன ஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளித்திருந்து, பின்னர் தனது சட்டத்தரணியூடாக முரணான கருத்தைத் தெரிவித்திருந்தமையும் கவனத்துக்குரியது.
அவரது சாட்சியின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் சந்திரசேனவின் மரணம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு வழங்கிய சத்தியக்கடதாசியின் இரண்டாம் பக்கத்தில் 'மஹிந்த - நாமல் குறித்து வாய்திறந்தால், முன்னைய வழக்குகளில் சாட்சிகளுக்கு நேர்ந்த கதியே உனக்கும் ஏற்படும்; கழுத்தில் கயிறு மாட்டிக்கொள்ளும் நிலையை நானே உருவாக்குவேன்' என ஓர் அதிகாரி தன்னை மிரட்டியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருப்பதுக்கும் இந்த வாக்குமூலத்துடன் தொடர்புடையவர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் பார்க்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
நீதிமன்றத்தில் சரணடையவிருந்த ஒரு நபர், அதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்புவது கடினம். பிணையில் வெளிவந்திருந்த கபில சந்திரசேனவுக்குப் போலிப் பிணையாளர்களை முன்நிறுத்தி, அவரது பிணையை இரத்துச் செய்து, அவரை மீண்டும் சிறைக்குள் தள்ளும் வேலைத்திட்டம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறதா எனவும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதை விட, அந்த ஊழலுக்குச் சாட்சியாக இருப்பவர்களே முதலில் தண்டிக்கப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளின் மரணம் என்பது ஒரு தனிநபரின் தற்கொலையாகப் பார்க்க முடியாது.
அது இலங்கையின் நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட மற்றுமொரு தாக்குதல். உண்மையான குற்றவாளிகள் பகிரங்கமாக உலவுகிற நிலையில் சாட்சிகள் மர்மமான முறையில் மண்ணுக்குள் போய்க்கொண்டிருப்பது கொடுமையானது.
கொலைக் கலாசாரத்தைக் கையில் வைத்திருந்த ஓர் அமைப்பு, தாம் திருந்தி ஜனநாயக அரசியல் நீரோடைக்குள் வந்துவிட்டோம் என்று மக்கள் மத்தியில் தொடர்ந்து கூறிவந்த காலகட்டத்தில், நாட்டில் நிலவிய கொலைச் சம்பவங்களுக்கு எதிராக உரக்கக் குரல்கொடுத்து வந்தார்கள்.
ஆனால், அவர்களது ஆட்சியில் மிக முக்கியமான அரச அதிகாரிகள் 'தற்கொலை' என்ற போர்வையில் மரணங்களைத் தழுவி வருகிறார்கள். அதுமாத்திரமன்றித் துப்பாக்கிக் கலாசாரங்களும் அத்துமீறி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அவர்களின் அத்துமீறிய ஆட்சிக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் பலர் மர்மமான முறையில் மரணங்களைச் சந்தித்து வருகின்றமை கவனத்துக்குரியவை.
ஏற்கெனவே, 323 கொள்கலன்களைப் பரிசோதனையின்றி துறைமுகத்திலிருந்து வெளிக்கொணர்ந்தமை தொடர்பில் அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்த டான் பிரசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதேபோல், நூற்றுக்கணக்கான கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய வன்முறைகள் தொடர்வதென்பது ஓர் ஆட்சியாளரின் அத்துமீறிய அதிகாரத் திமிர் என்றே குறிப்பிட வேண்டும்.
ஒரு சாட்சியாளரைப் பாதுகாக்க வக்கற்ற தற்போதைய அரசின் பிடியில் சிக்கி, இலங்கை மக்கள் திண்டாடிக்கொண்டிருப்பதைக் கண்ணூடாகப் பார்க்க முடிகிறது.
ஆகையால், முறையான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தாம் வழங்கிய 'பாதுகாப்பு' எனும் வாக்குறுதியையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது தற்போதைய ஆட்சியாளர்களின் கடமை என்பதை ஆணித்தரமாக இடித்துரைக்க வேண்டும்.
அதற்கான அழுத்தத்தை நாட்டுப்பற்றாளர்கள் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.