நாட்டில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஜனநாயக ரீதியாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் இன்றி, அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மாகாணங்களின் இயல்பான நிர்வாகச் செயற்பாடுகளைப் பாதிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் சில புதிய நியமனங்கள் தொடர்பிலும் அவர் இதன்போது கடுமையான சந்தேகத்தை வெளியிட்டார். குறிப்பாக, மாவட்ட ரீதியாக ‘சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் நியமித்து வருவது எவ்வகையான அரசியல் நோக்கம் கொண்டது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாத ஒரு சூழலில், இவ்வாறான பதவிகளை ஆளும் தரப்பினருக்கு வழங்குவது தேர்தல் வெற்றிக்கான ஒரு தந்திரோபாயமாகவோ அல்லது அரச நிர்வாகக் கட்டமைப்பிற்குள் நேரடி அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கான முயற்சியாகவோ இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் தொடர்புடைய சுகாதாரத் துறையை அரசியல் மயப்படுத்துவதை விடுத்து, முறையான தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.