சுவிஸிலிருந்து வந்தவர் சண்டிலிப்பாயில் வெட்டிப் படுகொலை; தடையங்களை அழிக்க பாரிய திட்டம்!

சுவிஸிலிருந்து வந்தவர் சண்டிலிப்பாயில் வெட்டிப் படுகொலை; தடையங்களை அழிக்க பாரிய திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டம் - சங்குவேலி பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய  வள்ளிபுர சந்திரசேகர் எனும்  முதியவர், சங்குவேலியில்  உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் வீட்டின் புகைக்கூட்டின் (chimney) வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், முகத்தை துணிகளால் மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள், முதியவர் அணிந்திருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மேலும், தடயங்களை அழிக்கும் நோக்கில் கையுறைகள் அணிந்து செயல்பட்டதுடன், மோப்ப நாய் வழித்தடத்தை குழப்பும் வகையில் மிளகாய் தூள் தூவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கொள்ளையின்போது எந்த கைத் தொலைபேசியையும் எடுத்துச் செல்லாமல்  தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த முதியவர் 14ஆம் திகதிக்குப் பிறகு காணாமல் போன நிலையில், நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர் குறித்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து வந்த மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த குறித்த முதியவரை பணம் நகைக்காக கொன்ற இச் சம்பவம்  பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.