'தீராத வடு'; கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்!

'தீராத வடு'; கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்!

தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான உறவுகள் வருகை தந்து, உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

2009ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.

அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பப்பட்டு 10.30க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து, இறுதி யுத்தத்தில் நான்கு அங்கத்தவர்களை இழந்த வற்றாப்பளையை சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும் நினைவுகளும் கலந்த துயரமான சூழலாக மாறியிருந்தது. அஞ்சலி செலுத்த வந்த பலர் மலர் தூவி, தீபம் ஏற்றி மற்றும் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு பூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா

இதேவேளை இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் இன்றையதினம் (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இலங்கை தமிழரசு கட்சியின் குருமண்வெளி வட்டார கிளையின் ஏற்பாட்டில் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன் , போரதீவுபற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது வருகின்றது. முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மன்னாரில்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை(18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம் பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கல்முனை

கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.