இராணுவத்தினரை நினைவுகூரச் சென்ற விமலை இழுத்துச்சென்ற பொலிஸார்; கொழும்பில் பதற்றம்!

இராணுவத்தினரை நினைவுகூரச் சென்ற விமலை இழுத்துச்சென்ற பொலிஸார்; கொழும்பில் பதற்றம்!

இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் அங்கு வருகை தந்திருந்தனர்.

இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கவில்லை.

இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், "இரண்டு நிமிடங்கள் தாருங்கள், கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" எனக் கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அந்த அழைப்பின் போது, "இன்றைய தினம் எவரையும் ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம்" என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொலிஸாருக்கும் விமல் வீரவங்சவின் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவ்விடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த பாதுகாப்புப் பிரிவினரின் தடைகளையும் தள்ளுமுள்ளுகளையும் மீறி விமல் வீரவங்ச நினைவுத் தூபியை நோக்கி முன்னேறினார். எனினும், தூபியின் பிரதான பகுதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த பொலிஸார் இடமளிக்காததால், அவர் அதற்கு அருகாமையிலுள்ள தரையில் மலர்களை வைத்து தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

இந்த தள்ளுமுள்ளுப் போராட்டத்தின் போது விமல் வீரவங்ச நிலத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின் போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைது செய்து, அதில் ஒருவருக்கு விலங்கிட்டு பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர். இதன்போது உடனடியாக தலையிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கைது செய்யப்பட்டவர்களுடன் தானும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டார். விமல் வீரவங்சவின் இந்த அதிரடித் தலையீட்டை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச,

நாட்டில் அமைதியை நிலைநாட்ட உயிரைத் தந்த எமது போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த சாதாரண குடிமக்களுக்கு உரிமை இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் டயஸ்போராவின் அழுத்தங்களுக்கும், அவர்களின் மனக்கசப்பிற்கும் பயந்து கொண்டே அரசாங்கத்தினால் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

தற்போது நினைவிடத்தைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சமூக ஊடகங்களில் அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடைபெற்ற ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை (19) தேசிய யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தின் யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒத்திகைப் பணிகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஒத்திகைப் பணிகளும், நாளை நடைபெறவுள்ள பிரதான நிகழ்விற்கான ஏனைய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேரடங்கிய குழுவினர், ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் யுத்த வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில், பொலிஸ் அதிகாரிகளினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அங்கு கூடியிருந்த குழுவினரை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.