நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
5 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
மக்களை திசை திருப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே, வழக்கமாக ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்தார்.
யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நாளை (19) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.