'குரூஸ் ஏவுகணையையே கடத்தலாம்'; டொரண்டோ விமான நிலைய பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய W5!

'குரூஸ் ஏவுகணையையே கடத்தலாம்'; டொரண்டோ விமான நிலைய பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய W5!

கனடாவின் மிக பரபரப்பான டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் அதேவேளை, விமான நிலைய ஊழியர்களைப் பயன்படுத்தி சர்வதேச கடத்தல் கும்பல்கள் மிக எளிதாகப் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லும் அதிர்ச்சித் தகவல் W5 இன் பிரத்தியேகப் புலனாய்வு மூலம் அம்பலமாகியுள்ளது.

பயணிகளின் உடமைகள் எக்ஸ்ரே (X-ray) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தண்ணீர் பாட்டில்கள் கூட பறிமுதல் செய்யப்படும் அளவுக்குப் பயணிகள் பகுதி பாதுகாப்பாக உள்ள போதிலும், ஊழியர்கள் வந்து செல்லும் 'மறுபக்கக் கதவு' (Back door) கடத்தல்காரர்களின் திறந்த பண்ணைக் கதவாக மாறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

"விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது எவரும் சோதிப்பதில்லை"

பியர்சன் விமான நிலையத்தில் கடந்த 20 வருடங்களாக 'ரேம்ப்' (Ramp worker) ஊழியராகப் பணிபுரியும் 'சார்ள்ஸ்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் W5 ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் பாதுகாப்பு ஓட்டைகளை இவ்வாறு விவரித்துள்ளார்:

"நான் எனது வேலையை முடித்துவிட்டு, டெர்மினல் கதவுகள் வழியாக நேரடியாக வெளியேறி, வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்லும் ரயிலைப் பிடிக்க முடிகிறது. எவரும் என்னைச் சோதிப்பதில்லை. ஊழல் நிறைந்த ஒரு ஊழியர், விமானத்தில் இருந்து போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸை மிக எளிதாக எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட முடியும். நாங்கள்கூட வேடிக்கையாகப் பேசுவதுண்டு; யாராவது ஒரு 'குரூஸ் ஏவுகணையை' (Cruise Missile) தூக்கிக்கொண்டு வெளியே நடந்தால் கூட இங்கிருக்கும் அதிகாரிகள் யாரும் நிறுத்த மாட்டார்கள்."

கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில், விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது தான் ஒரேயொரு முறை மாத்திரமே சோதிக்கப்பட்டதாக சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்கள் வெளியேறும் போது அவர்களைத் தொடர்ந்து சோதிப்பது யாருடைய கடமையும் (Mandate) அல்ல என்பதே இதற்குக் காரணம் என W5 கண்டறிந்துள்ளது. ஏதேனும் குறிப்பிட்ட விசேட சம்பவம் நடந்தால் மட்டுமே அங்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச கடத்தல் கும்பல்களின் ஊடுருவல்

பிராந்தியத்தின் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி டீட்டர் போஹெய்ம் (Dieter Boeheim) இது குறித்துத் தெரிவிக்கையில், விமான நிலையங்கள் பயணிகளைக் கண்காணிப்பதற்காகவே கட்டப்பட்டுள்ளனவே தவிர, ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக அல்ல என்றார்.

W5 இன் ஆய்வுகளின்படி, ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels), மெக்சிகன் கார்டெல்கள் (Mexican Cartels), ஆசியக் குற்றவியல் நெட்வொர்க்குகள் மற்றும் இத்தாலிய மாஃபியா போன்ற உலகின் மிக ஆபத்தான பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், பியர்சன் விமான நிலையத்தின் உள்ளே தங்களுக்காக வேலை செய்யும் ஊழல் ஊழியர்களைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் போதைப்பொருள் அடங்கிய பைகளை, பியர்சன் விமான நிலையத்தின் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியாமல் உள்நாட்டுப் பயணிகள் பகுதிக்கு (Domestic Baggage Claim) மாற்றுவதன் மூலம் சுங்கச் (Customs) சோதனைகள் எவையுமின்றி கடத்தல்காரர்கள் அதனை டொராண்டோ வீதிகளுக்குக் கொண்டு சேர்க்கின்றனர். உள்நாட்டுப் பகுதிக்குச் செல்லும் கதவுகளில் ஊழியர்கள் தங்களின் அனுமதி அட்டைகளை (Access Cards) 'ஸ்வைப்' செய்யாமலேயே மற்றவர்களின் பின்னால் (Tailgating) உள்நுழைவதையும் W5 குழுவினர் நேரில் அவதானித்துக் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.

கனடாவிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற 100 கிலோ கொக்கெய்ன்

சமீபத்தில் W5 வெளியிட்ட "தி கொக்கெய்ன் சூட்கேஸஸ்" (The Cocaine Suitcases) என்ற ஆவணப்படம், கனடிய விமான நிலையங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, தங்களுக்குத் தெரியாமலேயே போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு இளம் கனடியர்கள், தலா 25 கிலோ வீதம் மொத்தம் 100 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளைத் தங்களின் பைகளில் அடைத்து பியர்சன் விமான நிலைய சோதனைகளையும் தாண்டி ஹாங்காங் வரை கடத்தியுள்ளனர்.

அங்குள்ள சுங்க அதிகாரிகளிடம் அவர்கள் மாட்டிக்கொண்டதை அடுத்து, தற்போது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"ஒரு சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கெய்ன் அடங்கிய சூட்கேஸை கனடிய அதிகாரிகளால் எப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் போனது?" எனப் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் தாய் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்கேனர்களைத் தவிர்க்கும் ஊழியர்கள்

இந்தக் கடத்தல் வலையமைப்பில் இருந்து கடைசி நேரத்தில் தப்பிய 'எரிக்' என்ற இளைஞன் கூறுகையில்:

"விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு ஊழல் ஊழியர்களின் பணி நேர அட்டவணையை (Duty Schedule) அடிப்படையாகக் கொண்டே கடத்தல் விமானங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. சோதனையிடும் ஊழியர் அடையாளம் காண்பதற்காக எங்களின் பைகளை அதிக எடையில் (Overweight) வைக்குமாறு பணிக்கப்பட்டோம். அந்தப் பைகளை உள்ளக ஊழியர்கள் எடுத்து, ஸ்கேனர் (Scanner) பரிசோதனைகளுக்கு உட்படத்தாமல் கடத்திச் செல்வதாக எமக்குக் கூறப்பட்டது."

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பாதுகாப்புப் பிரிவுகள்

இந்த விவகாரம் குறித்து கனடிய வான் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் (CATSA) W5 கேள்வி எழுப்பிய போது, தங்களின் முதன்மை நோக்கம் வெடிபொருட்கள் போன்ற விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பொருட்களைக் கண்டறிவதே தவிர, சட்டவிரோத போதைப்பொருட்களைக் கண்டறிவது தங்களின் நேரடிப் பொறுப்பிற்குள் வரவில்லை என அவர்கள் கைவிரித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆர்.சி.எம்.பி (RCMP) புலனாய்வாளர் உலிஸஸ் பொடெய்ல்ஹோ (Ulisses Botelho) இது குறித்து எச்சரிக்கையில், "9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பயணிகளின் பாதுகாப்பு முறைகள் மாற்றப்பட்டன.

அதேபோல, இப்போது விமான நிலையங்களின் உள்ளே இருக்கும் இந்த 'உள்ளக அச்சுறுத்தல்களை' (Insider Threats) ஒழிப்பதற்கும் புதிய கடுமையான சட்டங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும், இல்லையெனில் கனடா பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.