$1.8 பில்லியன் நிதி விவகாரம்: ட்ரம்பிற்கு எதிராகக் குடியரசுக் கட்சி எம்பிக்கள் திடீர் கிளர்ச்சி! 

$1.8 பில்லியன் நிதி விவகாரம்: ட்ரம்பிற்கு எதிராகக் குடியரசுக் கட்சி எம்பிக்கள் திடீர் கிளர்ச்சி! 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் கொண்டுவரப்பட்ட $1.8 பில்லியன் டாலர் பெறுமதியான 'அதிகார துஷ்பிரயோக எதிர்ப்பு' நிதித் திட்டத்திற்கு (Anti-weaponization fund), அவராலேயே நியமிக்கப்பட்ட குடியரசுக் கட்சி (GOP) செனட் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால் வாஷிங்டன் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிதி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள உள்முரண்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி ட்ரம்பின் முதன்மை இலக்குகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்ற அமலாக்கத்திற்கான (Immigration Enforcement) பல பில்லியன் டாலர் பெறுமதியான விசேட சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் குடியரசுக் கட்சியினர் திணறி வருகின்றனர்.

கடந்த பைடன் (Biden) நிர்வாகத்தின் கீழ், தங்களுக்கு எதிராக நீதித்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறும் நபர்களின் சட்டத்தரணிக் கட்டணங்களை (Legal fees) மீள வழங்குவதற்கும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவுமே இந்த $1.8 பில்லியன் நிதித் திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்திருந்தார்.

எனினும், இதில் ஜனவரி 6 நாடாளுமன்றத் தாக்குதலின் போது பொலிஸார் மீது வன்முறையைப் பிரயோகித்துக் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களும் உள்வாங்கப்படலாம் என்ற தகவல் குடியரசுக் கட்சி உறுப்பினர்களையே கொதிப்படையச் செய்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் சூசன் கொலின்ஸ் (Susan Collins):

"இந்த விவகாரத்தை என்னால் எவ்வகையிலும் ஆதரிக்க முடியாது. ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தாக்குதலின் போது பொலிஸ் அதிகாரிகள் மீது வன்முறையை ஏவி, நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து சட்டக் கட்டணங்களை மீள வழங்குவது அப்பட்டமான தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், வட கரோலினாவின் செனட்டர் தோம் டில்லிஸ் (Thom Tillis) இந்தத் திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். "நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அல்லது குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு எதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க முடியும்? இது ஒரு முட்டாள்தனமான முடிவு. இவர்கள் இழப்பீட்டிற்குத் தகுதியானவர்கள் அல்ல, சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்" என அவர் ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப் விடுத்த காலக்கெடு தவறியது; சபைகள் ஒத்திவைப்பு!

குறித்த எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்ற மசோதாவானது ஜூன் 1 ஆம் திகதிக்குள் தனது மேசைக்கு வர வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான காலக்கெடு விதித்திருந்தார்.

எனினும், குடியரசுக் கட்சிக்குள்ளேயே இதற்குத் தேவையான 50 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, செனட் சபை (Senate) எவ்வித வாக்கெடுப்புமின்றி மெமோரியல் தின (Memorial Day) விடுமுறைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கையாள்வதற்காகப் பதில் அற்றோர்னி ஜெனரல் டோட் பிளான்ச் (Todd Blanche) நாடாளுமன்றத்திற்கு விரைந்து, குடியரசுக் கட்சி செனட்டர்களுடன் 90 நிமிடங்களுக்கும் மேலாக மூடிய அறைக்குள் அவசர விவாதங்களை நடத்தினார்.

எனினும், ட்ரம்பின் இந்த நிதித் திட்டத்தை ஆதரித்துப் பேசுவதற்கு அங்கு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வரவில்லை என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செனட் சபையின் முட்டுக்கட்டையை அடுத்து, பிரதிநிதிகள் சபையும் (House of Representatives) தனது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புகளை ரத்து செய்துள்ளது.

"நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை ட்ரம்ப் இழந்துவிட்டாரா?"

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜோன்சன், இந்த நெருக்கடி குறித்துப் பேசுவதற்காக வெள்ளை மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியை நேரில் சந்திக்கவிருந்த போதிலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதால் அந்தச் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் மீதான கட்டுப்பாட்டை நீங்கள் இழந்துவிட்டீர்களா என ஓவல் அலுவலகத்தில் (Oval Office) வைத்து ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "எனக்குத் தெரியாது, உண்மையில் அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும், நான் எப்போதும் எது சரியோ அதை மட்டுமே செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.