அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கை நெருங்குவதாக ஈரான் அறிவிப்பு: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கை நெருங்குவதாக ஈரான் அறிவிப்பு: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

சுமார் 20 பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்கா - ஈரான் சமாதான உடன்படிக்கை சாத்தியம் என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவிப்பு.

ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை நீக்கவும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளதாகத் தகவல்.

சுமார் 20 பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானின் தயர் (Tyre) மாவட்டத்தில் உள்ள மாரகே (Marrakeh) நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினால் அவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் ஏற்கனவே எச்சரித்திருந்த பின்னணியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

24 மணித்தியாலங்களில் சமாதான உடன்படிக்கை: பாகிஸ்தான் பிரதமர்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது எக்ஸ் (X) தளத்தில், "நாம் முன்னெப்போதையும் விட சமாதான உடன்படிக்கைக்கு மிக நெருக்கமாக உள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்த உடன்படிக்கை இறுதி செய்யப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானிய விவகாரத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி (Seyed Abbas Araghchi) அரச ஊடகத்திற்குத் தெரிவிக்கையில், அமெரிக்காவுடன் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை நெருங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கையானது இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இந்த உடன்படிக்கையின் கீழ் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கியத்துவமிக்க ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படும் என்றும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை (Blockade) நீக்கப்படும் என்றும் அரக்சி தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னரே ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார். அமெரிக்க உயர் அதிகாரிகளும் இந்த விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

யுத்தப் பின்னணியும் தற்போதைய இராஜதந்திர நகர்வுகளும்

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த யுத்தம் ஆரம்பமானது.

இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடாப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தியதுடன், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹொர்முஸ் நீரிணையையும் மூடியது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் போர்நிறுத்தம் (Ceasefire) எட்டப்பட்ட போதிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நீடித்தன.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையாளர்கள் மிகச் சிறந்த உடன்பாட்டை எட்டியுள்ளதால், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் (சனிக்கிழமை) பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் விடுத்துள்ள பதிவில், இந்தச் சமாதான உடன்படிக்கையின் டிஜிட்டல் கையொப்பமிடுவதற்கான (Electronic signing) ஏற்பாடுகளைத் தனது நாடு மேற்கொண்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கையின் முக்கிய நிபந்தனைகள்

வெள்ளிக்கிழமை பிற்பகல் அமெரிக்க அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய விரிவான விளக்கத்தின்படி உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஹொர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும், அதற்குப் பதிலாக ஈரானிய கப்பல் போக்குவரத்து மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்கும்.

இதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அவை அழிக்கப்பட்டு நாட்டிலிருந்து அகற்றப்படும்.

ஈரானிய ஊடகங்கள் குறிப்பிட்டதைப் போல எவ்வித சொத்துக்களும் முன்கூட்டியே விடுவிக்கப்பட மாட்டாது என்றும், பொருளாதார நன்மைகள் அனைத்தும் ஈரான் தனது கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே அமையும் என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் நேரடியாக உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.