அபிவிருத்திக் கூட்டத்தில் அர்ச்சுனா - கஜேந்திரகுமார் கடும் வாக்குவாதம்!

அபிவிருத்திக் கூட்டத்தில் அர்ச்சுனா - கஜேந்திரகுமார் கடும் வாக்குவாதம்!

வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) கூடியது.

இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது எதிர்ப்பை தெரிவித்தார்.

அது தொடர்ந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே இயங்க வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், குறித்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைக்க அபிவிருத்திக் குழு தலைவர் நேற்றைய தினம் தீர்மானித்தார்.

ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அங்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.