கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 14பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(21.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில், குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உமையாள்புரம் பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த விசேட அதிரடிப்படையினர், காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொது மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது விசேட அதிரடிப்படையினரை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் அயலவர்கள் தாக்கியதாகவும், இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்தில் ஈடுப்பட்டு அனைத்து தரப்பினரையும் தாக்கி கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று(21) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் முழுமையாக கேட்டறிந்த நீதி, சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதில், சிறு குழந்தைகள் இருவர், அவர்களது தாய் - தந்தை, பாடசாலை மாணவிகள் இருவர் மற்றும் முதியவர்கள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.