நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக 'த ஹிந்து' குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இருவேறான வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய (8) நிலவரப்படி 28 ஆக அதிகரித்திருந்தது.

கைதிகளின் நெரிசல் நிலைமையை கருத்திற் கொண்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1200 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகளும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.