அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தேடப்பட்ட கனடியர் பிரான்சில் கைது

அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தேடப்பட்ட கனடியர் பிரான்சில் கைது

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்ட கனடாவின் மேற்கு வான்கூவர் (West Vancouver) பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா ராயல் மவுண்டெட் பொலிஸ் (RCMP) வெளியிட்டுள்ள தகவலின்படி, கரிந்தர் தியோ (Garinder Deo) என்பவர் கடந்த ஜூலை 7 ஆம் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிரான்சில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு ஒப்படைக்கும் (Extradition) சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கைது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் அதிகாரிகள் இந்தியாவுடன் தொடர்புடைய மூன்று சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை முறியடித்ததாக அறிவித்ததற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது. அந்த அமைப்புகள் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய சமூகத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையுடன் தொடர்புடையவை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க குற்றப்பத்திரிகையின் படி, கரிந்தர் தியோ கலிபோர்னியாவில் இருந்து கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை கனடா மற்றும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு கடத்தும் குற்றவியல் குழுவிற்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய வேறு ஒரு குற்றவியல் குழுவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த மேலும் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கான சட்டநடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், அமெரிக்க நீதித்துறை இந்த வாரம் இந்தியாவில் சிறையில் உள்ள பிரபல கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஜூன் மாதம் சற்ரே (Surrey), பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உத்தரவிட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.