குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர்கைது

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்டபோது கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல் திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு பொலிசார் தமிழ் மக்கள் மூவரை 10.05.2025இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம் சென்று கலந்துரையாடியுள்ளதுடன், தமிழ்மக்கள் தமது பயிற்செய்கை நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் சுதந்திரம் மறுக்கப்படக்கூடாதெனவும், இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தண்ணிமுறிப்பு குருந்தூர்மலைப்குதியில் தமது வயல்காணிகளை பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட சாமித்தம்பி ஏகாம்பரம், சிறீரத்தினம் கஜரூபன், வரதன் இளமாறன் ஆகிய மூவர் 10.05.2025இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்கல் இடப்பட்ட பகுதிகளுக்குள் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கைதுசெய்யப்படுள்ளனர்.

இந்தவிடயத்தினை அறிந்தவுடன் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்து, கைதுசெய்யப்பட்ட மூன்று பேருடனும் கலந்துரையாடியிருந்தேன்.

அத்தோடு பொலிபொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியதில், தமக்கு வவுனியாவில் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், தொல்லியல்திணைக்களத்தின் பகுதிக்குள் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபட்டதற்காகவே தம்மால் குறித்த மூவரையும்கைதுசெய்ததாகவும் தெரிவித்தார்.

அத்தோடு 11.05.2025நாளை கைதுசெய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இருப்பினும் இந்தக் காணிகள் அனைத்தும் அந்த மக்களுக்குரிய காணிகள் என்பதை பொலிஸ் பொறுப்பதிகாரிக்குத் தெளிவுபடுத்தினேன்.

ஏற்கனவே மக்கள் பயிற்செய்கை மேற்கொண்ட காணிகளில், மக்களைத் தொடர்ந்து பயிற்செய்கை மேற்கொள்ளவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் சீர்கேடான செயற்பாடுகளே இங்கு இடம்பெற்று வருகின்றன என்பதையும் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தேன்.

இந்த விடயத்திலே தொல்லியல் திணைக்களமானது தமது எண்ணத்திற்கு ஏற்றவாறு எல்லைக்கற்களையிட்டு இக்காணிகளை அபகரித்து வைத்திருந்தால் மக்கள் எங்கே விவசாயம்செய்வது.

மக்கள் தமது காணிகளுக்குள் சுதந்திரமாகச் சென்று பயிற்செய்கை செய்வதற்கான அவர்களது சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளே இந்த நாட்டில் தற்போது இடம்பெறுகின்றது.

குறிப்பாக தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் ஆகிய மூன்று இடங்களும் மீள்குடியேற்றம்செய்யப்படவில்லை. இவ்வாறு எமது மக்களை மீள்குடியேற்றம்செய்யாமல், இந்த இடங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்ளப்போகின்றனரோ என்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு இருக்கின்றது.

இத்தகைய சூழலில் தமிழ்மக்கள் தமது பூர்வீக விவசாயக் காணிகளில் பயிற்செய்கை  மேற்கொண்டு தமது வாழ்வாதரத்தை ஈட்டுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளில் வனவளத்திணைக்களம், வனஜீவராசிதிணைக்களம், தொல்லியல்திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச இயந்திரங்களால் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டிருக்கும் செயற்பாடு நிறுத்தப்படவேண்டுமென்றுதான் நான் அரசாங்கத்தைக் கோருகின்றேன் - என்றார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc