மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவ தலைவர்களை சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரிலிருந்த ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் தாக்குதல் மேற்கொண்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்று பாகிஸ்தான் மற்றும் ஈரானின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
மேலும் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் மற்றும் பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.