ரஷ்ய கொலைக்களத்துக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

ரஷ்­யா – உக்ரைன் போரில் இரு தரப்­பிலும் இணைந்து போரி­டு­வ­தற்­கான கூலிப் படை­களுக்­­காக இலங்­­கையின் ஓய்வு பெற்ற இரா­ணுவ வீரர்கள் அழைத்துச் செல்லப்­பட்­டுள்­ளதும் சண்­­டையில் சிக்கி இவர்­களில் பலர் உயி­ரி­ழந்­தி­ருப்­பதும் நாட்டில் பலத்த பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக பொய் கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்­பட்­டுள்­ளனர். இவர்­கள் அங்கு ரஷ்யா- உக்ரைன் போரில் முன்னணி சண்டை முனைகளுக்கு அனுப்பப்­ப­ட்டுள்­ள­னர்.

இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு வரப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அங்கு செயற்படும் கூலிப்படைகளில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். மாதம் 7 இலட்சம் ரூபா சம்­பளம் தரு­வ­தா­கவும் சண்­டையில் மர­ணித்தால் குடும்­பத்­திற்கு 12 கோடி ரூபா வழங்­கப்­ப­டும் என்றும் இவர்­க­ளுக்கு பொய் வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் குறிப்­பி­டப்­பட்­டது போன்று அதி­க­ளவு சம்­பளம் வழங்­கப்­ப­­டு­வ­தில்லை என்றும் இவர்­களை ஏமாற்றி அழைத்துச் சென்று ரஷ்­யா­வி­லுள்ள ஆட்­சேர்ப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு பெருந் தொகைப் பணத்­திற்கு விற்­பனை செய்­துள்­ளமை குறித்தும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடினமான மற்றும் கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாகவும் அங்கி­ருந்­து தப்பி வந்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து கவ­னிப்­பா­ரின்றி இறந்துள்ளதாகவும் தெரி­­விக்­கப்­­ப­டு­கி­றது.

இவ்­வா­று 500இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதன் பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஒருவரே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்­பிட்­டிருந்­தார். அத்துடன், ரஷ்ய – உக்ரைன் மோதலில் இணைவதற்காக 600இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர்களுக்கு போலியான சம்பள வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் இருப்பதாகவும் ஜயசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை, அவர்களில் 15 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்­நி­லையில் அர­சா­ங்கம் இந்த ஆட்­க­டத்­தலை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. நேற்­றைய தினம் ஊடக மாநாடு ஒன்றை நடாத்­திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இவ்­வாறு ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என வலியுறுத்தினார்.

ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘‘இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர். எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது’’ என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டில் பொரு­ளாதார நெருக்­க­டி­யி­ல் அனை­வரும் வேறு­பா­டின்றி சிக்­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் ஏனை­யோ­ரைப் போன்றே ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர்­களும் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று தொழில்­வாய்ப்புப் பெற முயற்­சிக்­கின்­றனர். எனினும் அவர்­க­ளுக்கு ஆசை வார்த்­தை காட்டி இவ்­வாறு கொலைக்­க­ளத்­துக்கு அனுப்பும் நபர்­க­ள் எந்தளவுதூரம் மனிதாபிமானமற்ற கொடூரர்களாக இருப்பார்கள் என்பதை இந்த விவகாரம் உணர்த்துவதாகவுள்ளது. இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கி பணத்தையும் பெறுமதிமிக்க உயிர்களையும் இழக்க வேண்டாம் என மக்களை விழிப்பூட்டுவது காலத்தின் தேவையாகும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc