அரசமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பான கடிதத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் சிறீதரன் எம்.பியின் கிளிநொச்சி - வட்டக் கட்சி முகவரிக்கு, பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றார்.
அரசமைப்புப் பேரவையில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை இந்தக் கடிதத்தில் சுமந்திரன் விலாவாரியாக விவரித்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
'இந்தப் பின்புலத்தில் குறித்த அந்தப் பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம். கட்சிக்கும் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையினால், மேற்படி பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்சிக்கு அறிவுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளரால் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.