எஸ்.அஷ்ரப்கான்
1. ஜனாதிபதி முறைமை:
1. சில திருத்தங்களுடனான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையே ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஆதரிக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தனது செயல்கள் பற்றி பாராளுமன்றத்துக்கு பதில் கொடுத்தல், நீதி மன்றத்தின் கேள்விக்குட்படுத்தல் என்பன உள்வாங்கப்பட வேண்டும். அதே போல நீதி சம்பந்தப்பட்ட விடயங்களில் ஜனாதிபதியின் தலையீடு மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் ஏதாவாதொரு தீர்மானம் இன நல்லறவுக்கு குந்தகமாக அமையும் பட்சத்தில் அதற்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு ஜனாதிபதி கட்டுப்பட வேண்டும்.
Il. துணை ஜனாதிபதிகளாக இருவர் இருப்பர். ஒருவர் முஸ்லிம் மற்றவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை சேர்ந்தோராக இருக்க வேண்டும். இவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தெரிவு செய்ய வேண்டும்.
2. தேர்தல் சீர்திருத்தம்
1. உள்ளுராட்சி தேர்தல் முறை என்பது வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை கொண்டதாக அதாவது 50 க்கு 50 என்றிருக்க வேண்டும். அத்துடன் புதிய தொகுதிகள் வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களின் நலனை கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமாக மேலதிக வட்டாரங்கள் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் உருவாக்கப்பட வேண்டும். ஐந்து வீதத்துக்கும் குறைவாக சிறுபான்மை மக்கள் வாழும் கிராமங்களில் சிறு பான்மை மக்களை ஒன்றிணைத்து இப்புதிய வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
2. புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றில் அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா, தெஹிவளை ஆகியவை தேர்தல் தொகுதிகளாக்கப்பட வேண்டும்.
3. பாராளுமன்ற தேர்தல் என்பது விகிதாசார முறைப்படியே இருக்க வேண்டும். அனைத்து தொகுதிகளுக்கும் உறுப்பினர் தேவை என்பதை கருத்திற் கொண்டு இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை ஒரு புதிய தேர்தல் மாவட்டமாக கருதி அதற்கேற்றாற் போல் பாராளுமன்ற அங்கத்துவம் பகிரப்பட வேண்டும். அத்துடன் தேர்தல் மூலம் 200 பேரும் தேசிய பட்டியல் மூலம் 30 பேரும் நியமனம் பெறுவர். அத்துடன் சமயத்தலைவர்கள் சிலர் ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் முறையே பௌத்த துறவி ஐவர், இந்து குருக்கள் மூவர், மௌலவிமார் இருவர். கிறிஸ்தவர் பாதிரி ஒருவர் என நியமிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் சமயத்தலைவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அரசியல் கட்சி சார்பற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஆக பாராளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 240.
4. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத சம்பளம் சழங்கப்படுவது நிறுத்தப்பட்டு அவர்கள் கலந்து கொள்ளும் பாராளுமன்ற நிகழ்வுகளுக்கேற்ப கொடுப்பனவு வழங்க வேண்டும்.
5. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன பேர்மிட் வழங்க கூடாது. பாராளுமன்றம் வந்து செல்வதற்கு அவர்களுக்கான போக்கு வரத்து செலவு வழங்கப்பட வேண்டும்.
5. இனப்பிரச்சனைக்கான தீர்வு:
1. வடக்கும் கிழக்கும் எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படக் கூடாது.
2. எம்மை பொறுத்த வரை மாகாண சபைகள் தேவையற்றவை என்பதால் அவை கலைக்கப்பட்டு நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு ஒரு அதிகார சபை என்ற வகையில்
மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டு அவை மாகாண சபை சட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கான சேவைகள் செயலுறுப்பெறும். இந்த சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கொரு முறை தொகுதி ரீதியாக நடத்தப்படும்.
3. அப்படித்தான் மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றால் பிரிந்த வடக்கு கிழக்கின் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் கிழக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை வடக்குடன் இணைக்க முடியும். அதே போல் அம்பாரை மாவட்ட சிங்கள மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் அம்மக்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்துடன் இணைந்து கொள்ள முடியும். அதே போல வட மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் விரும்பினால் வட மாகாண முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து தனியான பிராந்திய சபை ஒன்றை வழங்க வேண்டும். இவை சாத்தியப்படாது என கருதினால் கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும்.
4. வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டு தனி அலகொன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என்ற கபடத்தனமான திட்டத்தை முற்றாக நாம் மறுக்கின்றோம். இது கிழக்கு முஸ்லிம்களை இன்னொரு இனத்துக்கு அடிமையாக்க முயல்வதாகும்.
5. "தென் கிழக்கு தேர்தல் மாவட்டம்" உரிவாக்கப்பட்டு அதன் கச்சேரி சம்மாந்துறையில் அமைய வேண்டும்.
இதற்குள் கல்முனை, சம்மாந்துறை, புதிதாக உருவாக்கப்படும் அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
6. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சரியாக நடந்ததா என்பது ஆராயப்பட வேண்டும். அவர்கள் இழந்த நகைகள், காணிகள், சொத்துக்கள் மீளவும் வழங்கப்பட வேண்டும். இதற்கான பொறுப்பை வட மாகாண சபை ஏற்க வேண்டும்.
7. இலங்கை பல்தேசிய இனங்களினதும், மதங்களினதும் தாயக பூமியாகும். ஆகவே சகல மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். எந்தவொரு மதத்துக்கும் இனத்துக்கும் எதிராக மனிதாபிமானமற்ற முறையில் எவராவது அவமரியாதை செய்தால் அவருக்கெதிராக சம்பந்தப்பட்ட மதத்தின் அமைச்சு வழக்குத்தொடர வேண்டும்.
8. மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் இணக்க சபை உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொரு மதங்களிலிருந்தும் 40 வயதுக்கு மேற்பட்ட சமயத்தலைவர்கள் ஐவர் வீதம் இருக்க வேண்டும்.
5. வேட்பாளருக்கான தகுதி:
a. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுபவர் செலுத்தும் பணம் கட்சியாயின் ஆயிரம் ரூபாவும் சுயேற்சையாயின் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்படக்கூடாது. இதனை அதிகரிப்பது ஜனநாயக தேர்தலில் போட்டியிடும் ஏழை மக்களின் ஜனநாயக உரிமை மீறலாக நாம் காண்கிறோம்.
b. வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட வீத இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது நீக்கப்பட வேண்டும். சில சபைகளில் இளைஞர்களை விட முதியவர்கள் சிறந்த சேவைகளை செய்வதையும், இளைஞர்களே பெரும்பாலும் துஷ்பிரயோகத்தில் ஈடு படுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்தில் காண்கிறோம்.
c. தேர்தலில் வெற்றி பெறாத பெண்களும் கட்டாயம் சபைக்கு அனுப்பத்தான் வேண்டும் என்பது நீக்கப்பட வேண்டும். வேட்பாளர் பட்டியலில் பெண்கள் 25 வீதம் சேர்க்கப்பட்டுள்ளதால் நேரடி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அல்லது கட்சி விரும்பும் பெண்ணை சபைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கலாம் என திருத்தப்பட வேண்டும். கட்டாயம் பெண்களை சபைக்கு 25 வீதம் நியமிக்கத்தான் வேண்டும் என்பது ஜனநாயகமாகாது.
6. வெளிநாட்டில் வாழ்வோாருக்கான வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது வாக்குகளை தேர்தல் திணைக்களத்துக்கு ஒன்லைன் மூலமாக அவர்களின் சொந்த ஈ மெயில் மூலமாக, தேர்தல் திணைக்கள ஒன்லைன் மூலம் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.