காசாவின் நிர்வாகம், புனரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பினால் உருவாக்கப்பட்டுள்ள "அமைதிச் சபையில்" (Board of Peace) இணையுமாறு கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கார்னிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையினால் இன்று அதிகாலை வெளியிடப்பட்ட நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களின் ஆரம்பப் பட்டியலில் கார்னியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. அந்தப் பட்டியலில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் மற்றும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இருப்பினும், பிரதமர் மார்க் கார்னியுடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்க அதிகாரி ஒருவர், ட்ரம்ப்பின் இந்த அழைப்பு வியாழக்கிழமை வந்தடைந்ததாகக் குறிப்பிட்டார். கார்னி தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திப்பதற்காக பெய்ஜிங்கில் தங்கியுள்ளார்.
இந்த அழைப்பை கார்னி ஏற்றுக்கொள்வார் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்த ட்ரம்ப்பின் மத்தியஸ்தத்திலான அமைதித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த "அமைதிச் சபை" உருவாக்கப்பட்டது.
கடந்த செப்டம்பரில் இந்த அமைதித் திட்டம் முதன்முதலில் பகிரங்கப்படுத்தப்பட்டபோது, இதனை ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க" திட்டம் என வர்ணித்த கார்னி, இதனைச் வெற்றிகரமாகச் செயற்படுத்த அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.