இலங்கையின் எல்லை முகாமைத்துவத்தை நவீனப்படுத்துவதற்கும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு (ABC) மின்-நுழைவாயில் (e-gate) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆசியாவில் தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு திறனை வலுப்படுத்துவதற்காக, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பினால் (IOM) நடைமுறைப்படுத்தப்படும் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய திட்டத்தின் கீழ் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அங்குார்ப்பண நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கே. எம். ஆனந்த விஜேபால, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா மற்றும் IOM அமைப்பின் தூதுக்குழுத் தலைவர் கிறிஸ்டின் பார்கோ உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
8.4 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்தத் திட்டம், இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், தொற்றுநோய் தயார்நிலை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான நடமாட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கருணாதிலக, சர்வதேச பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தரநிலைகளுக்கு ஏற்ப விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறைகளை நவீனப்படுத்துவதற்கும், சர்வதேச பயணம் மற்றும் வர்த்தகத்திற்கான பாதுகாப்பான நுழைவாயிலாக இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜப்பானிய தூதுவர் இசொமதா பேசுகையில், இந்தத் திட்டம் தொற்றுநோய்களுக்கு மட்டுமல்லாமல் பேரிடர்களுக்கும் தயாராக இருப்பதை மேம்படுத்தும் என்று கூறினார். மேலும், பி.ஐ.ஏ (BIA) விரிவாக்கத்திற்கான தற்போதைய யென்-கடன் உதவி உட்பட, இலங்கையின் விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பரிசோதனை அமைப்புகள், உயிரியல் ரீதியான அணுகல் கட்டுப்பாடுகள் (biometric access controls) மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட எல்லை முகாமைத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களையும் IOM கையளித்தது.
புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு இலங்கையின் நுழைவுத் துறைமுகங்களில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சுகாதார மீள்திறனை மேம்படுத்தும் என்று IOM இன் கிறிஸ்டின் பார்கோ தெரிவித்தார்.
இந்தப் புதிய மின்-நுழைவாயில்கள் மூலம் பயணிகள் வேகமான குடிவரவு அனுமதியைப் பெறுவார்கள் என்றும், இதனால் காத்திருப்பு நேரம் குறைவதுடன் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.