“புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உறுதி

“புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உறுதி

புதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நடைபெறுவது காங்கிரஸ் பாத யாத்திரை அல்ல. புதுச்சேரி மக்கள் பங்கேற்கும் பாத யாத்திரையாக மாறியிருக்கிறது. புதுச்சேரியில் ஆளும் அரசை மாற்ற வேண்டும் என்று இந்த பாதயாத்திரையில் மக்கள் பங்கேற்றுள்ளனர். உயர் கலாசாரத்தைக் கொண்ட புதுச்சேரியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் ஒரு பள்ளியோ, ஒரு மருத்துவப் படுக்கையோ உருவாக்கப்படவில்லை. ஒரு ஆசிரியர் பதவி, ஒரு மருத்துவர் பதவிக் கூட உருவாக்கப்படவில்லை. மாறாக 400 ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அதனால் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நல்லாட்சி நடந்ததாகக் கூறுகிறார்கள். மேலும், அந்த ஆட்சி திரும்பவும் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்தது என்பது இந்த ஆட்சியின் ஊழல் மட்டுமல்ல, இது ஒரு பாவச் செயல். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக தலைவர்கள் போன்றவர்களை எந்த மதமும் மன்னிக்காது. போலி மருந்து விவகாரத்தில் சிக்கி முக்கிய குற்றவாளியும், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆட்சியை மாற்ற புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டனர். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறந்த நிர்வாகம் மலரும். புதுச்சேரி வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். மேலும், முறைகேடுகளுக்கு துணையாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இணக்கமான அரசு மாநிலங்களில் அமையவில்லையென்றால் நிர்வாக ரீதியாகத் தொல்லைக் கொடுப்பதும், இரட்டை இன்ஜின் ஆட்சி முறை என்பதும் அரசியல் அமைப்புக்கும், மாநில தன்னாட்சிக்கும் விரோதமானது என்றார்.

தொடர்ந்து அவர், புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குமா என்று கேள்விக்கு, கூட்டணி கட்சியுடன் துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்தும் பாஜகவின் கலாசாரம் காங்கிரஸில் இல்லை. மாறாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு சுமூகமாகப் பேசி கூட்டணி கட்சியுடன் முடிவு எடுக்கும். அது விரைவில் தெரியவரும் என பவன் கேரா தெரிவித்தார்.

பேட்டியின் போது புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பாதையாத்திரையில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா புதுச்சேரி தலைவர்களுடன் பங்கேற்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி