கனடாவின் குயெல்ப் நகரில், ஆபத்தான பாலியல் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட நபர் ஒருவர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களுக்குள்ளேயே மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதானி யோஹான்ஸ் (Medhani Yohans, 36) என அழைக்கப்படும் இந்த நபர், பல தடவைகள் பாலியல் வன்புணர்வு மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவருகிறது.
திங்கட்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், நீதிமன்ற உத்தரவின் பேரில் யோஹான்ஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டவுடனேயே குயெல்ப் பொலிஸார் பொதுமக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஆபத்து நிலவுவதாக அவசர எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், அவர் விடுதலையான இரண்டு மணித்தியாலங்களில், அதாவது பிற்பகல் 2:35 மணியளவில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரு முகவரிக்குச் சென்றபோது பொலிஸாரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே அறிமுகமில்லாத பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பலமுறை சிறை சென்றவர். கடந்த சில வருடங்களில் மாத்திரம் பல தடவைகள் விடுதலையாகி, மீண்டும் அதே தினத்தில் அல்லது சில நாட்களில் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் ஒன்ராறியோ மாகாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாகக் குற்றமிழைக்கும் ஒருவரை ஏன் நீதிமன்றம் மீண்டும் மீண்டும் விடுதலை செய்கிறது எனப் பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லாரி ப்ரோக் (Larry Brock), இது கனடிய நீதித்துறையின் பலவீனத்தைக் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.