'எங்களுக்கு சுதந்திரம் இல்லை' என்று கூறிய மஸ்கெலியா லங்கா தோட்ட தொழிலாளர்கள் சுதந்திர தினமான இன்று காலை கறுப்புக் கொடிகள் ஏந்திக் கோஷமிட்டனர்.
203 வருடங்களாக மஸ்கெலியா கிலன்டில் தோட்ட லங்கா பிரிவில் வசிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்று காலை 11.30 மணிக்கு கருப்பு நிற கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் தோட்ட பிரிவில் இருந்து கோஷம் எழுப்பிய வண்ணம் சாமி மலை ஹேட்டன் பிரதான வீதியில் ஒன்று கூடினர்.
சுமார் 5 கிலோமீற்றர் வீதியை கடந்த 203 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகமோ மாறி மாறி வந்த ஆட்சியாளர்களோ எம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ, கடந்த காலங்களில் இருந்த மாகாண சபை உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபையின் உறுப்பினர்களோ செப்பனிடவில்லை.
கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் இணைந்து இந்த வீதியைச் செப்பனிட அடிக்கல் நட்ட போதும் வீதி செப்பனிடவில்லை. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை இந்த வழியாகக் கொண்டு செல்ல தொட்டில் கட்டி தூக்கிச் செல்ல வேண்டி உள்ளது.
1990 நோயாளர் காவு வண்டி பிரதான வீதியில் வந்து நின்று விடும். சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்து நோயாளர் காவு வண்டியில் அவ்வாறு கொண்டுவரும் வேளையில் பலர் உயிரிழந்துமுள்ளனர். சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் இடைநடுவில் ஏற்பட்டுமுள்ளது.
கடந்த மாதம் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மிகவும் சிரமத்துக்கு
மத்தியில் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாடு 78 சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் எமக்கு சுதந்திரம் இல்லை.
நாட்டின் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வந்து எமது தோட்ட வீதியை செப்பனிட உடன்
கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.