உலகம் அதிக அபாயகரமானதாகவும் பிளவுபட்டதாகவும் மாறிவரும் நிலையில், எமது சமூகத்தைப் பிணைத்துள்ள உறவுகளை வலுப்படுத்துவதில் புதிய கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.
கனடாவின் சனத்தொகை பன்முகத்தன்மை கொண்டதாக மாறிவரும் சூழலில், சமூக மற்றும் சிவில் ஈடுபாட்டையும், கூட்டுச் சொந்தம் என்ற உணர்வையும் வளர்ப்பது முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
கனடிய அடையாளங்கள் மற்றும் கலாச்சார அமைச்சரும், உத்தியோகபூர்வ மொழிகளுக்கான பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு மார்க் மில்லர் (Marc Miller), 'உரிமை, சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பு' (Rights, Equality and Inclusion) தொடர்பான புதிய ஆலோசனைக் குழுவின் உருவாக்கத்தை இன்று அறிவித்தார்.
கல்வித்துறை சார்ந்த பிரமுகர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்ட இந்தக் குழு, சமூக ஒருமைப்பாட்டை வளர்ப்பதுடன், பகிரப்பட்ட அடையாளத்தின் கீழ் கனடியர்களை ஒன்றிணைக்கவும், அனைத்து வடிவங்களிலுமான இனவாதம் மற்றும் வெறுப்புணர்வை ஒழிக்கவும் கனடா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வழிகாட்டும்.
கனடிய பன்முக கலாச்சாரச் சட்டத்தின் (Canadian Multiculturalism Act) கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சரால் நிறுவப்பட்ட இந்த ஆலோசனைக் குழு, அமைச்சருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
இந்த ஆலோசனைக் குழுவின் முக்கிய பொறுப்புகள் பின்வருமாறு:
நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் வாழும் சமூகங்களுக்கிடையே பாலங்களை உருவாக்கவும், யூத எதிர்ப்பு (antisemitism) மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு (Islamophobia) உட்பட அனைத்து வகையான இனவாதம் மற்றும் வெறுப்புணர்வுகளை ஒழிக்கவும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
உரிமைகள் மற்றும் சமூக உள்ளீர்ப்பைப் பாதுகாப்பதற்கான கனடா தழுவிய முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், வளங்களைப் பகிர்வதற்கும், சிவில் சமூகம் மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தல்.
சிவில் சமூகம், கல்வித்துறை, இளைஞர் தலைவர்கள் மற்றும் பூர்வீகக்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களிலிருந்தும் நம்பிக்கைக்குரிய தலைவர்களின் வலையமைப்பை உருவாக்கி, சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பை மேம்படுத்த நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குதல்.
அமைச்சரின் செயல்பாடுகளுக்குத் தேவையான அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் விரிவான ஆலோசனைகளைச் சமர்ப்பித்தல்.
சமூகங்களிடையே நம்பிக்கை, சொந்தம் மற்றும் புரிதலை வளர்க்கும் பொதுவான நற்பெயரை (narrative) உருவாக்குதல்.
இலக்குகளை அடைவதற்காக பூர்வீகக்குடி மக்களுடன் இணைந்து செயற்படுதல்.
இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
“உரிமை, சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பு தொடர்பான புதிய ஆலோசனைக் குழுவானது, எமது பகிரப்பட்ட விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த கனடாவை உருவாக்க உதவும். பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை, மரியாதை மற்றும் ஒற்றுமையை ஆழப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு நபரும் தாம் மதிக்கப்படுவதை உணர முடியும்” என்று, கனடிய அடையாளங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
'இனவாத எதிர்ப்பு மூலோபாயம் 2024–2028' (Canada’s Anti-Racism Strategy) மற்றும் 'வெறுப்புணர்வை எதிர்ப்பதற்கான கனடாவின் செயல்திட்டம்' ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஆலோசனைக் குழு ஆதரவளிக்கும்.