புதிய கணக்காய்வாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட சமுதிகா ஜயரத்ன, இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக் காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் நாயகமாகவும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள இவர், இப்பதவியை வகிக்கும் இலங்கையின் முதலாவது பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.