அநுர அரசிடம் வரதராஜாப்பெருமாளின் கோரிக்கை!

அநுர அரசிடம் வரதராஜாப்பெருமாளின் கோரிக்கை!

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும், மாகாண சபைகளுக்கென அரசியல் யாப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்கி, மக்களாட்சியைக் கொண்டவையாக அவை செயற்படுவதற்கு வேண்டியனவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டுள்ள தீர்மானம் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.விக்கினேஸ்வரன் (தோழர் கிருபா) சார்பில் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜாப்பெருமாள் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி வந்த இலங்கை அரசு ஒவ்வொன்றும் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாமல் காலம் கடத்தி வந்திருகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் காலம் தள்ளிக் கொண்டே போவது, அந்தந்த மாகாண மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிப்பதாகும்.

2017ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் (திருத்த) சட்டமானது நடைமுறைப்படுத்த முடியாத சட்டமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.

நடைமுறைப்படுத்த முடியாத சட்டமொன்றைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் காலத்தை தள்ளிச் செல்வது ஜனநாயக விரோதமானதாகும்.

இப்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தல்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்துவதாகக் கூறியே இலங்கைவாழ் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்று ஆட்சி அமைத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த நாள் தொட்டு ஜனாதிபதி உட்பட அரச அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஆள்மாறி ஆள் மாகாண சபைத் தேரதல்களைக் காலம் தள்ளிப்போடுவதற்கு வெவ்வேறு விதமான காரணங்களை கூறி வந்திருக்கின்றார்கள்.

கடைசியாக, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக முடிவெடுப்பதற்கென நாடாளுமன்றக் குழுவொன்றை நியமித்திருக்கின்றார்கள். இதுவும் குறிப்பிட்ட தேர்தல்களை மேலும் காலம் தள்ளிச் செல்வதற்கான அரசின் தந்திரமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

மாகாண ஆட்சி முறைமைக்கே எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகாலக் கொள்கையையே தேசிய மக்கள் சக்தி அரசு கடைப்பிடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

மக்களாட்சியைக் கொண்ட மாகாண ஆட்சிகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார அமைப்புகள் கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைமுறையில் செயற்படுவது மிக அவசியமானதாகும். அவற்றுக்கான தேர்தல்கள் நடைபெறுவதை அரச ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் தங்களது சுய அரசியல் ஆதாய நோக்கோடு தீர்மானிப்பது அதிகார துஸ்பிரயோகமே.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையைக் கொண்ட மாகாண ஆட்சியானது

(1) இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையின மக்களினதும் அடிப்படை நலன்களுக்கு மிக அவசியமானது என்பதையும்,

(2) இலங்கை போன்ற பல்தேசிய இனங்கள் வாழும் மற்றும் பல்வேறு வகைகளிலும் பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் மைய ஆட்சிக் கட்டமைப்பில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்திருப்பது நாட்டின் ஜனநாயக செயன்முறைக்கும், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகளுக்கு எப்போதும் ஆபத்தானதாகும் என்பதையும்,

(3) நாட்டின் அனைத்து மாகாண பிரதேசங்களும் குறிப்பிடத் தக்க அளவுக்கு உரிய பொருளாதார சமநிலையை எட்டுவதற்கான வளர்ச்சியை அடைவதற்கு அந்தந்த மாகாண மக்களுக்கு நெருக்கமான அரசியல் தலைமையைக் கொண்டவர்கள் நியாயமான அளவுக்கு சுயாதீனமான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டவர்களாக செயற்படுவதற்கான அரச கட்டமைப்பாக மாகாண ஆட்சி முறைமை தடையின்றி செயற்படுவது அவசியமாகும் என்பதையும்,

(4) இலங்கையின் அனைத்து தேசிய இன மக்களும் அவரது பாரம்பரிய சமூக வாழ்விடப் பிரதேசங்களில் அவரவரது கலாசார, பண்பாட்டு, வழிபாட்டு மற்றும் வரலாற்று ரீதியாக மரபார்ந்த விடயங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அடிப்படை உரிமைகள் கொண்டவர்களாவர். இவை தொடர்பான ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்தி, கடந்தகால தவறுகளை சரி செய்வது அரசின் கடமை என்தைனை வலியுறுத்தி, இந்த விடயங்களில் அரசை நோக்கி குரலெழுப்புவதற்கும், உரிய கோரிக்கைளை முன்வைப்பதற்கும், உரிய சட்ட நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சிகளே சட்ட நியாயாதிக்கம் கொண்ட அரச கட்டமைப்பாக இருக்க முடியும் என்பதையும் எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் உடனடியாக நடத்துவதற்கு வேண்டிய சட்டத்தை, கொழும்பு மைய மத்திய அரசு, குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செய்வதோடு, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் காலதாமதங்களின்றி நடப்பதை உறுதி செய்தல் வேண்டும் என்பதையும், மேலும், மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தும் முறையாகவும் முழுமையாகவும் அமுலாக்கப்படுவதற்கு வேண்டியனவற்றை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்பதையும் எமது கட்சி முதன்மையான கோரிக்கைகளாகக் கொண்டு செயற்படும்.

இவற்றுடன் தொடர்பான அரசில் கோரிக்கைகளையும் உரிய செயற்றிட்டங்களையும் மேற்கொள்ளுகின்ற ஓர் அரசியல் இயக்கத்தை எமது கட்சி முன்னெடுக்கும் எனவும், அதற்குரிய வகையில் வேண்டிய அரசியல் மூலோபாய மற்றும் தந்திரோபாய செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் எனவும் 31.01.2026 திகதி கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

மேலும், அதிகாரப் பகிர்வு, அபிவிருத்தி மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவை தொடர்பாக சட்டத்துறையினர், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், அரசியல் பொருளாதார சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோரை இணைத்த ஒரு மக்கள் ஜனநாயக இயக்கத்தை முன்னெடுப்பதற்காக மாவட்டங்கள் தோறும் மக்கள் பேரவைகளை ஆக்கி ஊக்கமுடன் செயற்பட வைக்கும் வேலைத்திட்டத்தை கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு தீரமானித்துள்ளது." - என்றுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி