இலங்கையின் தேசியக்கொடி, இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறதா?

இலங்கையின் தேசியக்கொடி, இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறதா?

இனங்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படவேண்டிய தேசியக் கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியதன் தொடக்கமாக அமைந்தது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4ஆம் திகதி என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற கருப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கருத்தமர்வு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது விக்கிரமராசசிங்க மன்னனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. சிங்கள மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்த இந்தக் கொடியைத் தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபித்ததால் கொடியின் ஓரத்தில் தமிழ் மக்களைக் குறிக்கச் செம்மஞ்சள் நிறப் பட்டியும் முஸ்லிம் மக்களைக் குறிக்கப் பச்சைநிறப் பட்டியும் சேர்க்கப்பட்டன.

ஆனால், சிங்கள மக்களைக் குறிக்கும் சிவப்பு வர்ணமே கொடியில் பெரும்பங்கு இடம் பெற்றது. பௌத்தக் குறியீடுகளும் இடம்பெற்றன. மூவின மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இல்லாது சிங்கள மக்களுக்கான கொடியாகவே தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது. இதனால்,

இலங்கைத் தீவின் வரலாற்றுக் காலத்தில் சிங்கம் ஒருபோதும் வாழ்ந்ததாக அறியப்படவில்லை. சிங்கள மக்கள் தமது வரலாற்று நூலாகக் கொண்டாடும் மகாவம்சத்தின் அடிப்படையிலேயே சிங்கள மக்களின் குறியீடாகச் சிங்கம் விக்கிரமராசசிங்க மன்னன் காலம்தொடக்கம் கொடிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆரம்பத்தில் கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்புறமாக, வலப்பக்கம் நோக்கியிருந்த சிங்கம் தமிழ் முஸ்லிம் மக்களைக் குறிக்கும் நிறப்பட்டிகள் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவற்றை நோக்கித் திருப்பப்பட்டது.

தேசியக் கொடியின் வடிவமைப்புக் குழுவில் அங்கத்துவம் வகித்த செனட்டர் நடேசன் கொடியில் இனப்பாகுபாட்டைக் கடுமையாக எதிர்த்தார். இது பிரிவினை வாதத்துக்கு வழிகோலும் என்று எச்சரித்தார். ஆனால், பேரினவாதம் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை.

இலங்கையின் தேசியக்கொடியில் இலங்கையில் காணப்படாத சிங்கத்தை வாளேந்த வைத்ததன் பின்னர் இலங்கை அரசால் இன்னுமொரு விலங்கைத் தேசிய விலங்காக இதுவரை அறிவிக்க முடியவில்லை. இலங்கைக் காடுகளில் காணப்படும், இலங்கைக்கு மட்டுமே உரித்தான சிறுத்தைப்புலியே தேசிய விலங்காகத் தெரிவு செய்வதற்கு மிகப்பொருத்தமானது.

ஆனால், விடுதலைப் புலிகள் தங்களது சின்னமாகப் புலியைத் தெரிவு செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காகச் சிறுத்தைப் புலியைத் தேசிய விலங்காக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது.

வாளேந்திய சிங்கம் தங்களை அடக்கியொடுக்குவதாகத் தமிழ் மக்கள் உணர்ந்ததாலேயே தங்களுக்கான தனியான ஒரு சின்னத்தைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இலங்கைத் தீவில் வாழுகின்ற அனைத்து மக்களும் சமமாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள் என்று பேசிவருகிறார்கள். இவர்கள் மனிதஉரிமைகளைப் பற்றியே பேசுகிறார்கள். இந்த சமத்துவம் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நாம் அவாவி நிற்பது இனங்களுக்கிடையிலான சமத்துவம். நாங்கள் நாடோடி மக்கள் கூட்டம் அல்லர்.

இலங்கைத்தீவில் நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம். ஒரு தேசிய இனத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையையே நாம் கோரி வருகின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாங்கள் பேசிவருகின்ற சமத்துவம் இனங்களுகிடையிலான சமத்துவம்தான் என்று சொன்னால், தேசியக்கொடியில் சம சமத்துவமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே மக்களுக்கு அதனை மெய்ப்பிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி