ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு, அதன் 'சூத்திரதாரி' (Mastermind) எவருமின்றி, புல்லர்ஸ் வீதியிலுள்ள (Bullers Road) அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லமொன்றில் கதவுகளை மூடிக்கொண்டு, தினமும் காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை விசாரணை செய்யப்படுகின்றது!
உறவினர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. தினமும் சமூகமளிக்க முடியாத காரணத்தினால், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளனர்.
கனிஷ்ட சட்டத்தரணிகளை (Juniors) வருமாறு கோரி பத்திரிகைகளில் விளம்பரம் போடப்பட்டுள்ளது. எந்தவொரு வழக்கும் இதுவரை இப்படி விசாரணை செய்யப்பட்டதில்லை.
"சூத்திரதாரி யார் என்பது ரவி செனவிரத்னவுக்குத் தெரியும். அவர் அதை எழுதிக்கொடுத்ததாகக் கூறினார். அப்படியிருக்கையில், யாருடைய தேவையோ தெரியவில்லை, வழக்கை அவசரமாக முடித்துவிட்டு உண்மையான சூத்திரதாரியை மறைக்கப் பார்க்கிறார்களா?"
ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் எப்படியாவது தீர்ப்பை வழங்கிவிடவா இந்தப் முயற்சி நடக்கிறது?
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு தற்போது புல்லர்ஸ் வீதியிலுள்ள நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் (Trial-at-Bar) விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், அதன் தீர்ப்பு ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தினார்.
எந்தவொரு ஊடகவியலாளரோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், இந்த வழக்குத் தற்பொழுது நாளாந்தம் விசாரணை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாகவே சிரேஷ்ட சட்டத்தரணிகள் வழக்கிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.