தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்' (PSTA), நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்குவதாக 'அனைவருக்கும் நீதி' (Justice for All) அமைப்பு எச்சரித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்: முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் மற்றும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுப்படுத்தும் கட்டளைகளை (Restriction Orders) நீதவான் நீதிமன்றத்திடம் கோரும் அதிகாரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு (DIG) வழங்கப்படவுள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒரு பகுதியை 'தடை செய்யப்பட்ட இடமாக' 72 மணிநேரம் வரை அறிவிக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குறுதி மீறல்: ஆட்சியைப் பொறுப்பேற்ற போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள தற்போதைய சட்டத்தினால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரம் (Impunity), புதிய சட்டத்தினால் மேலும் வலுவடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய கவலைகள்: இந்த புதிய சட்டமூலம் (PSTA) தொடர்பாக பின்வரும் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
பரந்த வரைவிலக்கணம்: பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளதால், அது துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கைது அதிகாரம்: பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல்: நிர்வாக ரீதியான தடுப்புக்காவல் மற்றும் விளக்கமறியல் காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மக்களை ஒடுக்குதல்: போராட்டங்களை ஒடுக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கும் என சிவில் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த புதிய சட்டமூலத்தை கைவிடுவதுடன், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க (Repeal) வேண்டும் எனவும், ஜனநாயகத்தை வலுப்படுத்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உண்மையான அரசியல் விருப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.