'மாகாண சபைத் தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க அரசு விரைந்து செயற்பட வேண்டும்' என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
கம்பஹா - திஹாரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
'வடக்கு, கிழக்கு மக்களுக்காக மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும். நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது. இதற்காக, கிராமிய மட்டத்தில் எமது அரசியல் குழுக்களைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்றார்.
அரசாங்கம் சுமார் 1,775 சொகுசு வாகனங்களை கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த நிதியை மக்களின் அடிப்படைத் தேவைகளான மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இன்று சாதாரண மக்கள் அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் வசதிகள் இன்றி பெரும் அவதிப்படுவதாகவும், அரசாங்கம் தனது கௌரவத்திற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒரு 'பிக்பொக்கெட்' திருடனின் உத்திக்கு ஒப்பிட்டுப் பேசிய நாமல் ராஜபக்ஷ, நிலக்கரி மோசடி, துறைமுகத்தில் கொள்கலன்கள் மாயமான விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பதாகச் சாடினார்
மற்றவர்கள் மீது திருட்டுப் பட்டம் சுமத்திக் கொண்டு, அரசாங்கம் திரைக்குப் பின்னால் பாரிய ஊழல்களைச் செய்து வருவதாகவும், குறிப்பாக பொலிஸ் அமைச்சரின் சட்ட அமலாக்கக் கதைகள் இவ்வாறான பாரிய ஊழல்களை மூடிமறைப்பதாகவே அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது அடிமட்ட அளவில் கிராமிய ரீதியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், பல திறமையான இளைஞர்கள் கட்சியுடன் இணைந்து வருவதாகவும் தெரிவித்த அவர், தேர்தல் ஒன்று அறிவிக்கப்படாத நிலையில் தற்போது வேறு தரப்பினருடன் கூட்டணி அமைக்கும் தேவை தமக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், அரசாங்கம் ஜனநாயகம் குறித்துப் பேசுவதானால், ஆளுநர்களின் நிர்வாகத்தில் உள்ள மாகாண சபைகளுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக, 2015ஆம் ஆண்டைப் போலவே தற்போதும் ராஜபக்ஷக்களை இலக்கு வைத்து பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதால் கிடைக்கும் நிதியை மக்களுக்குப் பயனுள்ள வகையில் அரசாங்கம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இல்லத்திலிருந்து வெளியேற்றுவது போன்ற விடயங்களில் அரசாங்கம் காட்டும் ஆர்வம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.