கியூபாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக இடைநிறுத்தியது 'ஏயார் கனடா'!

கியூபாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக இடைநிறுத்தியது 'ஏயார் கனடா'!

கியூபாவில் நிலவும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான தனது அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக இடைநிறுத்துவதாக 'ஏயார் கனடா' (Air Canada) அறிவித்துள்ளது. கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகள் மீது வர்த்தக வரிகளை (Tariffs) விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏயார் கனடா விடுத்துள்ள செய்தி அறிக்கையில், தற்போது கியூபாவில் தங்கியுள்ள சுமார் 3,000 வாடிக்கையாளர்களை மீள அழைத்து வருவதற்காக அடுத்த சில நாட்களுக்கு பயணிகள் அற்ற வெற்றுக் விமானங்கள் (Empty flights) அங்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கியூபாவின் விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் சீராக இல்லை என அரசாங்கங்களினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் (NOTAMs) தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெப்ரவரி 10ஆம் திகதி முதல் கியூபாவின் விமான நிலையங்களில் வணிக ரீதியிலான விமான எரிபொருள் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அங்குள்ள பயணிகளை மீள அழைத்து வரும் விமானங்களுக்குத் தேவையான கூடுதல் எரிபொருள் கனடாவிலிருந்தே கொண்டு செல்லப்படும் அல்லது அவசியமெனில் வழியில் உள்ள மற்றுமொரு இடத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பப்படும்" என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய விமான நிறுவனங்களின் நிலைப்பாடு

ஏயார் கனடா தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ள போதிலும், வெஸ்ட் ஜெட் (WestJet) மற்றும் ஏயார் ட்ரான்ஸட் (Air Transat) ஆகிய நிறுவனங்கள் இன்னும் தமது சேவைகளை முழுமையாக நிறுத்தவில்லை.

ஏயார் ட்ரான்ஸட்: அவசர கால மாற்றுத் திட்டங்கள் மூலம் திட்டமிட்டபடி விமானங்களை இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பெப்ரவரி 28ஆம் திகதி வரை பயணங்களை மேற்கொள்பவர்கள் எவ்வித அபராதமுமின்றி தமது பயணத் திகதி அல்லது இலக்கை மாற்றிக்கொள்ள அல்லது முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் ஜெட்: கியூபாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான போதிய எரிபொருளுடன் தமது விமானங்கள் அங்கு செல்வதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் பயணிகளுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்ட மீளப் பதிவு செய்யும் (Flex Change) வசதியையும் வழங்கியுள்ளது.

கனடிய அரசாங்கத்தின் பயண எச்சரிக்கை

கியூபாவில் நிலவும் மின்சாரம், எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடும் தட்டுப்பாடு காரணமாக, அங்கு செல்லும் கனடியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தடைகள் சுற்றுலா விடுதிகளையும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம்

மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று உத்தரவே (Executive Order) இந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும். கியூபாவை ஒரு "தோல்வியடைந்த நாடு" என வர்ணித்த ட்ரம்ப், அதன் எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்த நடவடிக்கையை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இது கியூப மக்கள் மீதான ஒரு கொடூரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி