யாழில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை; உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை; உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஹயஸ்

ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸின் விளக்கம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறை யில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டனர்.

எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததால், அதனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன், வாகனத்தில் இருந்த வட்டுக்கோட்டை, நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் பின்னணி மற்றும் அதிகாலை பயணத்துக்கான நோக்கம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குடும்பத்தினரின் வாக்குமூலம்

இதேவேளை, தனது பெறாமகன் குடும்பக் கஷ்டம் காரணமாகவே சிறு வயதில் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகச் செய்து வந்தார் என்று உயிரிழந்த சிறுவனின் சித்தி கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

'அறுவடை வேலைக்காக வேலையாட்களை ஏற்றவே அவர் அதிகாலை வேளையில் வேலணை நோக்கிச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும், பொலிஸாருக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் வாகனம் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

'சம்பவத்தின் போது பொலிஸாருக்கு வழங்கத் தன்னிடம் பணம் இல்லாததாலேயே, அச்சத்தில் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கக்கூடும். அதற்காக இவ்வளவு கொடூரமாகச் சுட்டுக்கொன்றிருக்கத் தேவையில்லை' - என்று அவர் கதறியழுதார்.

17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் விளக்குகையில்,

வாகனத்தை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, வானத்தை நோக்கிப் பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. அந்த எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததாலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி