டொராண்டோவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட "புரொஜெக்ட் சவுத்" (Project South) எனும் பாரிய ஊழல் விசாரணையில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொலிஸ் சீருடைகளைக் கடத்தியதுடன், தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியையும் தவறான முறையில் கையாண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில் 56 வயதான கான்ஸ்டபிள் திமோதி பேர்ன்ஹார்ட் (Timothy Barnhardt) என்பவர் மீதே அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
திமோதி பேர்ன்ஹார்ட், டொராண்டோ பொலிஸாருக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ ஆடைகள் மற்றும் சீருடைகளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தச் சட்டவிரோதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
தனது உத்தியோகபூர்வ Glock 9-mm கைத்துப்பாக்கியை, அனுமதிக்கப்படாத இடத்தில் வைத்திருந்ததுடன், வாகனத்தில் மிகவும் கவனக்குறைவான முறையில் அதனைப் பாதுகாத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. "பொதுமக்களின் அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில்" ஆயுதத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
பிரையன் டா கோஸ்டா (Brian Da Costa) எனும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பேர்ன்ஹார்ட், இரகசியமான தகவல்களைக் கிரிமினல் கும்பல்களுக்கு வழங்கியதாகவும், இது சில திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு வழிவகுத்ததாகவும் பொலிஸார் நம்புகின்றனர்.
யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) முன்னெடுத்த இந்த ஏழு மாத கால விசாரணையில், இதுவரை 8 தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.