யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 17 வயதுச் சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு, தலைக்குள் ஊடுருவி, மூளையைக் கடுமையாகச் சிதைத்தமையே மரணத்துக்கு நேரடிக் காரணம் என மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற சிறுவன், இன்று (10) அதிகாலை அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற ஹயஸ் ரக வாகனத்தை நோக்கிப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே இந்தச் சம்பவம் சம்பவித்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம்.மயூரதன் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பின்வரும் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.
பொலிஸார் சுட்ட துப்பாக்கித் தோட்டா, சிறுவனின் நெற்றிப் பகுதியில் பாய்ந்துள்ளது. நெற்றியைத் துறைத்துக்கொண்டு தலைக்குள் ஊடுருவிய அந்தத் தோட்டத, மூளையைக் கடுமையாகச் சிதைத்துள்ளது. இந்தப் பாரிய காயத்தின் காரணமாகவே சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.