'டித்வா; அது வெறும் இயற்கைச் சீற்றமல்ல, சமூகப் பாரபட்சத்தின் சாட்சியே!': ஐ.நா தெரிவிப்பு!

'டித்வா; அது வெறும் இயற்கைச் சீற்றமல்ல, சமூகப் பாரபட்சத்தின் சாட்சியே!': ஐ.நா தெரிவிப்பு!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தமானது இலங்கையில் கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ - பிரான்சே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்த மதிப்பீடுகளை விரைந்து முன்னெடுப்பதோடு, இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளியால் மலையகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களைப் பார்வையிட்ட பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

'டித்வா' சூறாவளி இலங்கையைத் தாக்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பேரனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய அளப்பரிய சேவையையும், இலங்கை மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் நாம் பாராட்டுகின்றோம். அத்துடன், பாதிப்புகளைக் குறைப்பதற்காகச் சர்வ தேச சமூகமும் உடனடியாக உதவிகளை வழங்க முன்வந்தது.

எது எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள், தூய்மையான குடிதண்ணீர்

மற்றும் வாழ்வாதார உறுதிப்பாடு போன்ற விடயங்களில் நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த அனர்த்தம் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே, தேவைகள் குறித்த மதிப்பீட்டின் போது மலையக மக்களுக்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்' என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி