தெரபோன் தேர்தல் தொகுதியின் முடிவுகளை இரத்துச் செய்து உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! 

தெரபோன் தேர்தல் தொகுதியின் முடிவுகளை இரத்துச் செய்து உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! 

கனடாவின் தெரபோன் (Terrebonne) மத்திய அரசாங்கத் தேர்தல் தொகுதியின் முடிவுகளை செல்லுபடியற்றதாக அறிவித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று (13) அதிரடித் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

குறித்த தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தொகுதியில் பதிவான தேர்தல் முடிவுகள் உடனடியாக இரத்துச் செய்யப்படுவதுடன், அங்கு மீண்டுமொரு இடைத்தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இந்தத் தீர்ப்பானது கனடிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற மத்திய அரசாங்கப் பொதுத்தேர்தலில், தெரபோன் (Terrebonne) தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் பெற்ற ஒரு வாக்கு வித்தியாசத்திலான வெற்றியை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பானது, பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்பை மேலும் தூரமாக்கியுள்ளது.

தெரபோன் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் டாட்டியானா அகஸ்டே (Tatiana Auguste), பிளொக் கியூபெக்வா (Bloc Québécois) வேட்பாளர் நத்தலி சின்க்ளேயர்-டெஸ்காக்னேவை விட ஒரேயொரு மேலதிக வாக்கைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் போது லிபரல் கட்சிக்கு 23,352 வாக்குகளும், பிளொக் கியூபெக்வா கட்சிக்கு 23,351 வாக்குகளும் கிடைத்தன.

எனினும், தேர்தல் திணைக்களத்தின் (Elections Canada) தவறான தபால் குறியீடு (Postal Code) காரணமாக தனது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்கு எண்ணப்படவில்லை என பிளொக் கியூபெக்வா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணையின் போதே உயர்நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாடு: வழக்கு விசாரணையின் போது, லிபரல் வேட்பாளர் தரப்பு சட்டத்தரணி இது ஒரு சாதாரண "எழுத்துப் பிழை" (Clerical error) என வாதிட்டார். எனினும், அதனை நிராகரித்த பிரதம நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர், "தேர்தல் நிறுவனங்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலகட்டத்தில், மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை உறுதிப்படுத்துவதே சட்டத்தின் நோக்கம்" எனச் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் திணைக்கள ஊழியர் ஒருவர் செய்த தவறினால் சுமார் 40 இற்கும் மேற்பட்ட தபால் வாக்கு உறைகள் தவறான முகவரிக்குச் சென்றுள்ளமை விசாரணையில் உறுதியானது. இது ஒரு சிறிய தவறு என நீதிமன்றம் கருதவில்லை.

அரசியல் தாக்கம்: இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் ஆசனங்களின் எண்ணிக்கை 168 ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 172 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

பிளொக் கியூபெக்வா வரவேற்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்துள்ள பிளொக் கியூபெக்வா கட்சி, "வாக்களிக்கும் உரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை" எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தெரபோன் தொகுதியில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது குறித்த தொகுதிக்கான நாடாளுமன்ற ஆசனம் உத்தியோகபூர்வமாக வெற்றிடமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி