உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளர் ரோஹன் குணரத்ன தொடர்பில் ஒரு முன்னுரை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளர் ரோஹன் குணரத்ன தொடர்பில் ஒரு முன்னுரை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது என்பது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் முதல் நிலுவையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். கோட்டாபய ஆட்சிக் காலத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்த அரசியல்வாதிகளுள் முஜிபுர் ரஹ்மான் முக்கியமானவராவார்.

அவர் முன்வைத்த பிரதான கேள்விகளில் ஒன்று, இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களாக ரோஹன் குணரத்ன மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமையாகும். அதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகவிருந்த பல சட்டத்தரணிகள், நாளாந்தம் வழக்கு விசாரிக்கப்படுவதை எதிர்த்து அதிலிருந்து விலகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தரும் அமைச்சரும் சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க கடும் பதிலை வழங்கியிருந்தார். முஜிபுர் ரஹ்மானின் அனைத்து விமர்சனங்களையும் நிராகரித்த அவர், முஜிபுர் ரஹ்மான் ஒரு குற்றச் செயலுக்குத் துணை நின்றவராக (Accomplice) இருக்கலாம் எனச் சாடினார். அத்துடன், தேவையேற்படின் ஒருதலைப்பட்சமாக வழக்கை விசாரித்துத் தண்டனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

முஜிபுர் ரஹ்மான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் வௌிப்படுவதைத் தடுப்பதாக ஜே.வி.பி.யின் இணையத்தளமான 'லங்கா ட்ரூத்' செய்தி வெளியிட்டுள்ளது. முஜிபுர் ரஹ்மானின் பேச்சில் வெடிகுண்டு வாடை வீசுவதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார். மற்றவரை நோக்கி ஒரு விரலை நீட்டும்போது, தங்களை நோக்கி நான்கு விரல்கள் நீளும் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும்!

எவ்வாறாயினும், உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகள் வேறுவிதமாகவே உள்ளன. இந்த வழக்கில் அரசாங்கத்தின் சார்பில், அதாவது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான சாட்சியாளர்கள் இருவர், இதுவரையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் அரச சார்பற்ற சக்திகளை மறைக்கவே முயற்சித்துள்ளனர் என்பது வெளிப்படையானது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள வியப்பு என்னவென்றால், இந்த வழக்கில் பிரதான சாட்சியாளர்களாக ஒரு பொய்யர் எனப் பெயர் பெற்றவரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகருமான ரோஹன் குணரத்ன மற்றும் கோட்டாபயவினால் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவராக நியமிக்கப்பட்ட சுரேஷ் சலே ஆகியோரை முன்னிலைப்படுத்துவதை நியாயப்படுத்துவதாகும். அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையில் இவர்கள் இருவர் குறித்தும் எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை!

இந்த இரு சாட்சியாளர்களும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ரோஹன் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு படுகொலை’ (Sri Lanka’s Easter Sunday Massacre) எனும் நூலிலும் தொடர்ச்சியாக இதே கருத்துக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இருவரினதும் கருத்துக்களும் முடிவுகளும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ரவி செனவிரத்ன (CID இன் முன்னாள் பிரதானி) ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சத்தியக்கடதாசிகளில் உள்ள விடயங்களுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2021 மே 03 ஆம் திகதி முதல் ரோஹன் குணரத்ன தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் (INSS) பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு நிழல் அரசாங்கமும் (Deep State) ஒரு மூளையாகச் செயற்பட்ட நபர் ஒருவரும் (Mastermind) இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அந்த 'மகா மூளையை' வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், தற்போது அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளரான ரோஹன் குணரத்ன மீண்டும் மீண்டும் கூறுவது யாதெனில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானின் குழுவானது 'ஐஎஸ்' (ISIS) எனப்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்பின் இலங்கை கிளையாகும் என்பதாகும். இத்தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பைத் தவிர வேறு எந்த சக்திகளும் இல்லை என்பதையே அவர் வலியுறுத்துகின்றார். இத்தகைய ஒரு நபரை பிரதான சாட்சியாளராகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு வழக்கையே அமைச்சர் பிமல் ரத்நாயக்க தீவிரமாகப் பாதுகாத்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ (DNA) பரிசோதனையின் ஊடாக, புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது 'சாரா ஜெஸ்மின்' அங்கு உயிரிழந்ததாகப் பெறப்பட்ட சான்றிதழானது ஒரு பொய்யான விடயம் என்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரோஹன் குணரத்ன தனது நூலின் 128 ஆம் பக்கத்தில் சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் பெயர்பட்டியலை வழங்கியுள்ளார். அதில் 16 ஆம் இலக்கத்தில் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான சான்றுகள் இல்லை. இது தெளிவாக கோட்டாபய ராஜபக்ஷவிற்குத் தேவைப்பட்ட ஒரு கருத்தை மீள வலியுறுத்துவதாகும்.

அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முஹம்மது ஹஸ்தூனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜெஸ்மின், சாய்ந்தமருது கூட்டுத் தற்கொலைச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை. அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்ற அவர் இன்னும் உயிருடனேயே இருக்கின்றார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 2021 மே 12 அன்று ‘நியூஸ் ஃபஸ்ட்’ (News First) ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்: “சாய்ந்தமருது துப்பாக்கிச் சமரிலும் அதனைத் தொடர்ந்த வெடிப்புச் சம்பவத்திலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்தமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என நாம் கருதுகின்றோம். ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையில், அவர் இருக்குமிடம் இதுவரை அறியப்படவில்லை.”

ஆனால் அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளர் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் கோட்டாபயவின் அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். கோட்டாபயவின் கூற்றுப்படி, சஹ்ரான் குழுவிற்குப் பின்னால் இருந்த ஒரே சக்தி 'ஐஎஸ்' (ISIS) அமைப்பாகும்.

கோட்டாபயவின் காவல்துறை அமைச்சராக இருந்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் நாடாளுமன்றத்தில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல போலிக்குற்றச்சாட்டுகளையும் ரோஹன் குணரத்ன தனது புத்தகத்தில் மீள வலியுறுத்தியுள்ளார். அதில் ஒன்று, மாவனல்லை புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசத் தொடர்புகள் ஏதேனும் உண்டா என ஆராய்வதைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டாகும். (குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 14 பேர் கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில், அதாவது 2022 மே 06 அன்று விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ரோஹன் குணரத்ன தனது நூலில் குற்றம் சுமத்தியுள்ளார் (பக்கம் 192).

அனைத்திற்கும் மேலாக, ரோஹன் குணரத்னவின் மிக முக்கியமான வாதம் என்னவென்றால், சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணி அவரை வழிநடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 'அபு ஹிந்த்' (Abu Hind) எனும் நபர், தென்னிந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதாகும். இந்த முடிவிற்கு அவர் எந்தவிதமான சான்றுகளையும் முன்வைக்கவில்லை. 'அபு ஹிந்த்' என அழைக்கப்படும் இலங்கையின் உயர் புலனாய்வு அதிகாரி ஒருவர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்த அறிக்கை மூலம் அவர் நிராகரிக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற உடனேயே, ரோஹன் குணரத்ன மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் alias பிள்ளையானைச் சந்தித்தமை ஆவணப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும். கோட்டாபயவின் பாதுகாப்பு ஆலோசகராக அவர் இருந்த காலத்தில், பிள்ளையான் ஒரு இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு, அவர்களது அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளரான ரோஹன் குணரத்ன; சஹ்ரான், பிரபாகரன் மற்றும் விஜேவீர ஆகிய மூவரையும் ஒரே தரத்திலான பயங்கரவாதிகளாகவே தனது நூலில் கருதுகின்றார் (பக்கம் 129).

“பிரபாகரன், விஜேவீர மற்றும் சஹ்ரான் ஆகியோரைக் கொண்டாடுவதன் மூலம் நம்மால் ஒற்றுமையையோ, ஸ்திரத்தன்மையையோ அல்லது செழிப்பையோ கட்டியெழுப்ப முடியாது. அவர்களது இயக்கங்கள் கொண்டாடப்பட வேண்டியவையா? அவர்கள் அடுத்த தலைமுறையின் ஹீரோக்களாக இருக்க வேண்டுமா? அல்லது நாம் அப்பாவி மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமா?” என ரோஹன் குணரத்ன தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2025 ரணவிரு (போர்வீரர்) தின நிகழ்வில் 'ரணவிரு' எனும் சொல்லைப் பயன்படுத்துவதற்குச் சிரமப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தின் சாட்சியாளர் ரோஹன் குணரத்ன இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

"தலைமைத்துவத்தில் மாற்றம் என்பது மிகவும் முக்கியமானது. தமது சொந்த வரலாற்றைக் கருத்திற் கொண்டு, ஜே.வி.பி தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்த ஆண்களையும் பெண்களையும் 'ரணவிரு' எனக் குறிப்பிடாமல் 'சிப்பாய்கள்' (Soldiers) என்றே அழைக்கின்றனர். இத்தகைய மனோபாவத்திலிருந்து வெளியே வந்து, இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்தவர்களை அடையாளப்படுத்துவது அவசியமாகும். தமிழ்நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அந்நிய சித்தாந்தமான தீவிர தமிழ் தேசியவாதப் பிரிவினைவாதத்திற்கு எதிராகவே 'ரணவிருக்கள்' போரிட்டனர். அதேபோன்று, ரணவிருக்கள் ஜே.வி.பியின் சித்தாந்தமான மார்க்சிசம், லெனினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராகவும் போரிட்டனர். அதுவும் ஒரு அந்நிய சித்தாந்தமே."

அரசாங்கத்தின் கௌரவ அமைச்சர்களே, இவர்தான் உங்களது பிரதான சாட்சியாளர்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ரோஹன் குணரத்ன வெளியிட்ட நூல் குறித்து, நாட்டின் முஸ்லிம்களின் பிரதான மத நிறுவனமான அகில இலங்கை ஜமியத்துல் உலமா (ACJU) இவ்வாறு தெரிவித்துள்ளது:

“இந்த நூலைப் பார்க்கும்போது, ஒரு தீவிரமான வாசகருக்கு இதில் முன்வைக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள் மற்றும் வாதங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும், முறையான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை என்பதும் புலப்படும். இதில் உள்ள முரண்பாடான விடயங்கள் ஒருபுறமிருக்க, போதிய தெளிவின்மை மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவிற்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை வருத்தத்திற்குரியது. இக்குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாத கூற்றுக்கள் மற்றும் அனுமானங்களுக்குள்ளேயே அடங்குகின்றன.” (Ref: ACJU/NGS/2023/186)

அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களே, இப்பொழுதாவது உங்களது பிரதான சாட்சியாளர் யார் என்பதை கண்திறந்து பாருங்கள்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி