அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தினால் கிரீன்லாந்தை (Greenland) இணைத்துக்கொள்ளப் போவதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, கனடா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு அங்கமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கனடா மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கு இதன் மூலம் இணக்கம் தெரிவித்துள்ளன.
பிரதமர் கார்னி பயணத்தை ரத்து செய்தமைக்கான காரணம்
ஆரம்பத்தில், கனடியப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்தது.
எவ்வாறாயினும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நிலவும் சோகமான சூழ்நிலை காரணமாக பிரதமர் மார்க் கார்னி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனையடுத்து, கனடிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
'ஆர்க்டிக் சென்ட்ரி' (Arctic Sentry) விசேட நடவடிக்கை
கிரீன்லாந்தின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களிலிருந்து அப்பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கும் நேட்டோ (NATO) இந்த வாரம் 'ஆர்க்டிக் சென்ட்ரி' எனும் புதிய முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது.
வடதுருவப் பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சிகளை ஒருங்கிணைப்பதும், எழும் அச்சுறுத்தல்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.
பாதுகாப்பு அமைச்சர் மெக்கின்டி இது குறித்துத் தெரிவிக்கையில்,
"கனடா ஒரு ஆர்க்டிக் தேசம். எமது வடக்கு எல்லையை நாம் எத்தகைய சவால்களுக்கும் மத்தியில் பாதுகாப்போம். இந்த ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பரோ தீவுகளுடனான எமது கூட்டுத் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், ஆர்க்டிக் பிராந்தியம் பாதுகாப்பாக உள்ளது எனும் தெளிவான செய்தியை உலகிற்குச் சொல்கிறது" எனக் குறிப்பிட்டார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
கண்காணிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை: இரு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆர்க்டிக் கடல் பிராந்தியத்தில் மேலதிக கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் இது வழிவகுக்கும்.
ஆயுதக் கொள்வனவு: டென்மார்க் ஏற்கனவே கனடாவிலிருந்து ஆயிரக்கணக்கான சி-8 (C-8 MRR) ரக துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான பல மில்லியன் டொலர் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது.
நேட்டோ நிபந்தனைகள்: இந்த ஒப்பந்தமானது ஒரு உத்தியோகபூர்வ உடன்படிக்கை (Treaty) அல்ல. எனினும், நேட்டோவின் 5-வது சரத்தின் கீழ் (Article 5) ஒரு நாடு தாக்கப்பட்டால் அது அனைத்து நாடுகளுக்குமான தாக்குதலாகக் கருதப்படும் எனும் விதியை இது மீள வலியுறுத்துகின்றது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல் பின்னணி
அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து 'நிச்சயமான தேவை' எனக் குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அதனை ஆக்கிரமிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் 8 நேட்டோ நட்பு நாடுகள் தமது படைகளை கிரீன்லாந்தில் நிலைநிறுத்தின.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப் தனது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்த போதிலும், பின்னர் நேட்டோ பொதுச் செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், பலாத்காரத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என அவர் அறிவித்தார். எவ்வாறாயினும், கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு விசேட அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
மியூனிக் மாநாட்டில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஐரோப்பிய நாடுகள் தமது நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நிலப்பரப்பின் மீதான தேவையற்ற உரிமை கோரல்களை நிராகரிக்க வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.