கனடாவின் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள புகழ்பெற்ற 'ரிடோ கால்வாய்' பனிச்சறுக்குப் பாதை (Rideau Canal Skateway), இன்று திங்கட்கிழமை (16) இரவு முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தேசிய தலைநகர் ஆணைக்குழு (NCC) அறிவித்துள்ளது.
அண்மை நாட்களாக நிலவி வரும் சூரிய வெளிச்சம் மற்றும் உயர்வடைந்துள்ள வெப்பநிலை என்பன கால்வாயின் பனிக்கட்டிப் பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, பனிக்கட்டியின் தரத்தைப் பாதுகாக்கவும், காலநிலை சீரடைந்ததும் அதனை மீண்டும் செப்பனிடவும் ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட முழுமையான பனிச்சறுக்குப் பாதையும் திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் பொதுமக்களுக்குத் தடை செய்யப்படும்.
செவ்வாய்க்கிழமை அன்று உறைபனித் தூறலுடன் (Freezing drizzle) வெப்பநிலை 3°C வரை உயரும் என வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை பனி உறைநிலையை (0°C) ஒட்டியே காணப்படும் எனத் தெரிகிறது.
காலநிலை சாதகமாக அமைந்தவுடன், "முடிந்தவரை விரைவில்" பாதையை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பதாக NCC தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் திகதி திறக்கப்பட்ட இந்தப் பாதை, இதுவரை 41 நாட்களுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த பருவத்தில் இதுவரை 785,000 இற்கும் அதிகமானோர் இங்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக, 'வின்டர்லூட்' (Winterlude) விழாவின் இறுதி வார இறுதியான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் சுமார் 141,000 பேர் பனிச்சறுக்கில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைக்கப்பட்ட கால எல்லைக்குப் பின்னர், மறு அறிவித்தல் வரும் வரை பனிக்கட்டிப் பரப்புக்குள் பிரவேசிப்பது ஆபத்தானது என்பதால் பொதுமக்களை ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.