"ஜம்மு காஷ்மீரின் காண்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறுதியில் நிறைவடையும்போது, பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும்’’ என மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இது குறித்து காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் காண்டி பகுதியில் ஷாபூர் காண்டி தடுப்பணை திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. இதன் காரணமாக காஷ்மீரில் 80 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட ரவி நதி நீர் கால்வாய், 492 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட நீர் விநியோக பாதை பயன்படுத்தப்படாமல் இருந்தது.
பிரதமர் மோடியின் தலையீட்டின் கீழ் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் நான்கு நீர் மின் நிலைய திட்டங்களும் வேகமாக நடைபெறுகின்றன.
மத்திய அரசின் ரூ.485.38 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ஷாபூர் காண்டி தடுப்பணை திட்டம் அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் நிறைவடையும். இதன் மூலம் ரவி ஆற்றில் இருந்து பாகிஸ்தானுக்கு வீணாக செல்லும் நீர் தடுத்து நிறுத்தப்படும்.
இந்த தடுப்பணை திட்டம் மூலம் ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் 32,173 ஹெக்டேர் நிலங்களுக்கும், பஞ்சாப்பில் 5,000 ஹெக்டேர் நிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இவ்வாறு ஜாவேத் அகமது ராணா கூறினார்.