ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஹேமர் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்திய விமானப் படையில் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை ரூ. 3.25 லட்சம் கோடிக்கு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவற்றில் 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். மீத விமானங்கள் பிரான்ஸிடமிருந்து பெறப்படும்.
இந்த விமானத்தில் ஹேமர் ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்படையில் அதிகளவில் ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெறும்போது, இதில் பயன்படுத்தப்படும் ஹேமர் ஏவுகணைகளை இந்தியாவில் கூட்டாக தயாரித்தால் இவற்றை இறக்குமதி செய்யும் தேவை ஏற்படாது என இந்தியா கருதியது. இத்திட்டத்துக்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது ஹேமர் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாகவும், இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
‘ஹேமரின்’ சிறப்பு: இலக்கை தரைமட்டமாக்கும் என்பதற்காக இந்த ஏவுகணைக்கு ஹேமர் (சுத்தியல்)என பெயரிடப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வானிலிருந்து தரை இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த ஏவுகணை பயன்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கது. 330 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை, நேவிகேஷன் உதவியுடன், 60 முதல் 70 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும்.
இந்த ஏவுகணையை பிரான்ஸில் உள்ள சப்ரான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிபன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹேமர் ஏவுகணையை தயாரிக்கும்.