நெடுஞ்சாலையில் ஒரு சில்லு (Tire) இல்லாத நிலையில், சுமார் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வணிக ரீதியான பாரவூர்தியை (Commercial Motor Vehicle) செலுத்திச் சென்ற சாரதி ஒருவருக்கு எதிராக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில், ஒன்ராறியோவின் 17ஆம் இலக்க நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லெகோர்ஸ் (Lecours) பகுதியில் இப்பாரவூர்தி பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டது. குறித்த வாகனம் மணற் பிரதேசத்திலுள்ள ஒரு சில்லு இன்றி, வெறும் 'ரிம்' உடன் நீண்ட தூரம் பயணித்ததை அவதானித்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில், இந்த பாரவூர்தியானது மேனிடோபா (Manitoba) மாகாணத்தின் ஸ்டீன்பாக் (Steinbach) பகுதியைச் சேர்ந்த ஒரு போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தியமைக்காக 41 வயதுடைய குறித்த சாரதி மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், முறையான பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற வாகனத்தை வீதியில் இயக்க அனுமதித்தமைக்காக அந்தப் போக்குவரத்து நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த பாரவூர்தி வீதியில் பயணிக்கத் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு, பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வாகனச் செலுத்துனர்கள் நெடுஞ்சாலைகளில் பயணங்களை ஆரம்பிக்கும் முன்னர், சில நிமிடங்கள் ஒதுக்கி வாகனத்தின் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதிக்குமாறு (Pre-trip inspection) மாகாண பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
"ஒரு சிறிய பாதுகாப்புப் பரிசோதனை பாரிய விபத்துக்களைத் தவிர்க்க உதவும். நீங்கள் மட்டுமன்றி வீதியில் பயணிக்கும் ஏனையோரும் பாதுகாப்பாகத் தமது இலக்கைச் சென்றடைவதை இது உறுதிப்படுத்தும்," என பொலிஸார் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.