கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்காத தமிழ்க் கட்சிகள்!

கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்காத தமிழ்க் கட்சிகள்!

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக் கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை.

மட்டுமல்ல, ஒவ்வொரு பிரச்சினையையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் தீர்வு காண்பது என்றும் பேசுவதில்லை. அல்லது ஒவ்வொரு விடயத்தையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் முன்னெடுத்துச் செயற்படுத்துவது என்றும் கூறுவதில்லை.

பதிலாக இவை தொடர்பாக பிரதி அமைச்சர்கள், NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் அங்கங்கே சில வார்த்தைகள் சொல்லப்படும். அதாவது அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளில் அக்கறையோடு செயற்படுகிறது. நிச்சயமாக மாற்றங்களை உருவாக்கும் என்று அவர்கள் அங்கங்கே சொல்லி, எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் அக்கறை அரசாங்கத்துக்குண்டு என்றவொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்தியின் ஆளும் நிலைப்பாட்டுக்கான உபாயமாகும்.

இந்த மாதிரியானதொரு உபாயத்தையே முன்பு ரணில் விக்கிரமசிங்கவும் கையாண்டு வந்தார். எதையும் உரத்த குரலிலோ, உறுதிபடவோ ரணில் சொல்வதில்லை. ஆனால், தந்திரமாகக் காய்களை நகர்த்துவார். ஐம்பது ஆண்டுக்கும் அதிகமான அரசியல் வரலாற்றைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஐந்து தடவைக்கு மேல் பிரதமராக இருந்திருக்கிறார்.

ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். அரசியல் வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும் இலங்கையின் எந்த நெருக்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்வைக் கண்டதேயில்லை. ஆனால், வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னுடைய அரசியற் காலத்தைக் கடத்திக் கொண்டார்.

ஏறக்குறைய அநுரகுமார திசநாயக்கவும் இத்தகையதொரு உபாயத்தை – தந்திரத்தைத்தான் கையாள்கிறார்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி, இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் – தீர்வை எட்டும் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு எதைப் பரிசாகக் கொடுப்பது என்று தெரியவில்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியும் அதற்குத் தலைமை தாங்கும் அநுரகுமார திசநாயக்கவும் சர்வரோக நிவாரணிகள். இதொரு முட்டாள்தனமான நம்பிக்கை. அடிப்படைகளற்ற எந்த நம்பிக்கையும் முட்டாள்தனமானதே.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் என்றவாறாக நடவடிக்கைகள் அமைந்துள்ளனவே தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியைக் காண்பதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ, திட்டமோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தெரியவில்லை.

அப்படித்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் தீர்வுக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் பின்னடிக்கிறது. தேர்தல் நடக்கும் என்று NPP யின் ஒரு தரப்புச் சொல்கிறது. தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று NPP யின் இன்னொரு தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட ஏய்ப்பு அன்றி, வேறென்ன?

அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என்று ஒரு தரப்புச் சொல்கிறது. அது இப்போதில்லை என்று இன்னொரு தரப்புக்கூறுகிறது.

இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த மாதிரிச் செயற்பாடுகளுக்கு என்ன பெயர்?

ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியவில்லை. கல்விக் கொள்கையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதையும் விட அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணியை எதிர்த்து முடக்குவதற்கே NPP க்குள்ளும் வெளியிலும் மும்முரமான முயற்சிகள் நடக்கின்றன.

ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. அதாவது வெளியே சொல்லப்பட்ட – மக்களுக்கு உறுதி அளித்த அளவுக்கு முந்திய ஆட்சியாளர்களில் (ஊழல்வாதிகளில்) NPP கைவைக்கவில்லை. இதுவரையில் பிடித்து உள்ளே போடப்பட்டிருப்பவர்கள் ஓரத்தில் இருந்த சிறிய எறும்புகளே.

என்பதால்தான் NPPயின்மீது கேள்விகளும் சந்தேகமும் வலுக்கிறது.

இதேவேளை இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் NPP க்குப் பதிலாக – மாற்றாக வேறு தெரிவுகள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். NPP யைத் தவிர்த்தால், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கலாமா என்றால், சஜித்தான் கடந்த ஆட்சியில் 1000 விஹாரைகள் திட்டத்தை உருவாக்கிய நாயகனாக இருக்கிறார்.

இலங்கைக்குத் தேவை தொழிற்சாலைகளே தவிர, விஹாரைகளோ, தேவாலயங்களோ, கோயில்களோ, மசூதிகளோ இல்லை. உலகத்திடம் கையேந்தி, கடன்வாங்கி ஆட்சியை நடத்தும் அரசாங்கத்தின் நிதியில் மத நிறுவனங்களை வளர்ப்பது மூடத்தனத்தை வளர்ப்பதாகவே அமையும். அப்படியான ஒருவரை எப்படி நம்பி ஏற்றுக் கொள்வது? அடுத்தது பொதுஜன பெரமுன. இந்த நாட்டைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்ஸவினரை எந்த அடிப்படையில் மறுபடியும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவது? மட்டுமல்ல, அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எதிர்வளமாகச் சிந்திப்பவர்கள்.

ஆகவே அவர்களும் பொருத்தமான தெரிவல்ல. மிஞ்சுவது, சக்குப் பிடித்துப்போன ரணில் தரப்புத்தான். அவர்கள்தானே எதற்குமே பொருத்தமற்றவர்கள் என்று சனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றால், இனி எந்த அடிப்படையில் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது?

இதுதான் மிகப் பெரிய துயரமும் அவலமுமாகும். இதுதான் NPP க்கும் வாய்ப்பாக உள்ளது.

இந்த யதார்த்தப் பின்னணில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கின்றனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் விட்டாலும் பரவாயில்லை.

புதிய அரசியலமைப்பு வந்தாலென்ன, விட்டாலென்ன? மாகாணசபைத் தேர்தல் நடந்தால் என்ன? நடக்காமல் போனாலென்ன? இனிமேல் ஊழலற்ற, பொருளாதார சுபீட்சத்தை நோக்கிய ஒரு ஆட்சி இருந்தால் போதும் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். இது பெருந்திரள் சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அவதானிப்பும் கருத்துமாகும்.

இதை உள ரீதியாக நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு அரசாங்கத்தின் எளிமையான நடவடிக்கைகளும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் தனிப்பட்ட – பகிரங்க நடமாட்டங்களும் அமைகின்றன. மிக எளிமையாக, தாங்கள் நெருங்கிப் பார்க்கக் கூடிய ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பது பெரும்பாலான மக்களுடைய எண்ணமாகும். ஆக, அநுரகுமார திசநாயக்க என்ற தங்கக் குதிரை உள்ளவரை தேசிய மக்கள் சக்தியின் கதிரைக்குப் பிரச்சினையில்லை.

தமிழ்ச் சமூகத்தில் முக்கியமாக இரண்டு விதமான நோக்குநிலையைக் கொண்ட தரப்புகள் உண்டு. ஒன்று, தேசிய மக்கள் சக்தியை நம்பி, அந்த மாயக்குதிரைக்குப் பின்னால் மகிழ்ச்சியோடு செல்லும் – செல்ல விரும்பும் தரப்பு. மற்றது, NPP யை நம்ப முடியாது என்று வெளியே நிற்கும் தமிழ்த்தேசியவாதத் தரப்பு. இதற்குள் சிறிய – குட்டிக்குட்டி – அணிகள் உண்டு. அடிப்படையில் அவையெல்லாம் ஒரு தரப்பே. ஆனால், இரண்டு தரப்புகளும் இன்றைய நிலையில் அரசியல் வலுவற்றவையே.

தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் தரப்பு, எந்த வகையிலும் அரசாங்கத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது. குறைந்த பட்சம், வடக்குக் கிழக்கில் உள்ள எந்தச் சிறிய – தனித்துவமான எத்தகைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாக இல்லை. இதற்கு இரண்டு எளிமையான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1. மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள். அது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்பார்ப்பும் அடிப்படைத் தேவையுமாகும் என்பதை NPP ஐ ஆதரிக்கும் தமிழ் பேசும் ஆதரவாளர்களும் சரி, NPP யில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்பேசும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என ஒரு பெரிய குழாத்தினர் இருக்கின்றபோதும் பேசுவதோ, அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அப்படி அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, NPP யும் இடமளிப்பதில்லை.

2. வடக்குக் கிழக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், ஆனையிறவு உப்பளம், கிழக்கில் பிற தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதையும் சீராக – முழுமையான அளவில் விரிவாக்கம் செய்து வளர்த்தெடுப்பதற்கு அரசாங்கத்தைக் கோரவோ, பொறுப்பெடுத்துச் செயற்படுத்தவோ முடியாதவர்களாகவே உள்ளனர்.

ஆக இந்தத் தரப்பு நானும் ரவுடிதான் என்று வலுக்கட்டாயமாக பொலிஸ் வண்டியில் அடம்பிடித்து ஏறும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியையே நினைவூட்டுகின்றனர். இவர்களுடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் நமக்குச் சிரிப்பூட்டுகின்றன. ஆனால், நாம் இதையெல்லாம் பார்த்து ரசிக்கும்படியாகவோ சிரிக்கும்படியாகவோதானா வாழ்கிறோம். ஒரு பெரிய போரினால் முற்றாகவே சிதைக்கப்பட்ட சமூகத்தின் மக்களல்லவா!

அப்படியென்றால், இந்தக் குறைபாடுகளை நீக்கி, சிதைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக – அல்லது அவ்வாறு தம்மை அடையாளப்படுத்த முற்படும் தமிழ்த்தேசியவாத சக்திகள் இந்த இடத்தில் மிக விழிப்பாகவும் உறுதியாகவும் மிக நுட்பமாகவும் மிகத்தீவிரமாகவும் தொழிற்பட வேண்டும். ஆனால், அதை எந்தக் கட்சியும் செய்யவே இல்லை.

தமிழ்த்தேசியவாத அரசியலை மென்நிலையிலும் தீவிர நிலையிலும் முன்னெடுக்கும் இரண்டு போக்குகள் உண்டு. ஒரு போக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் போன்றோர் பிரதிநிதித்துப்படுத்தும் தீவிர நிலைப்போக்கு. மற்றது சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர்.

இந்த இரண்டு தரப்பும் 2009க்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தபோதும் எதையும் செய்யவில்லை. அதிலிருந்து முரண்பட்டுப் பிளவுபட்டுப் பிரிந்து நின்றும் சாதிக்கவில்லை. இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ரெலோ, தமிழரசுக்கட்சி, முன்னணி போன்றவை பிளவுபட்டுள்ளன. உள்முரண்பாடுகளால் தமிழரசுக்கட்சியும் ரெலோவும் நீதிமன்றம் வரை சென்று விட்டன. சனங்கள் இப்பொழுது இந்தக் கட்சிகளின் உள் வீட்டுப் பிரச்சினையைக் கண்டு கொதிப்போராகவும் ரசிப்போராகவும் மாறியுள்ளனர். ஆனால், எல்லோருக்கு மேலும் துயரச் சுமைகளும் அபாயக் கத்திகளுமே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

தெற்கில் பலமான எந்த அரசியற் சக்தியும் இல்லை. ரணில் – சஜித் அணிப்போட்டி முடிவுக்கு வரவில்லை. புதிதாக வேறெந்தக் கூட்டணியோ சக்தியோ உருவெடுக்கவும் இல்லை.

இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்தாக என்ன செய்வது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் NPP சத்தமில்லாமல் தன்னைப் பலப்படுத்துவதில் மிக நுட்பமாகச் செயற்படுகிறது. அரசியல் ரீதியாக சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என வல்லாதிக்கச் சக்திகளை அது திறமையாக – தனக்கு வாய்ப்பாகக் கையாள்கிறது.

புலம்பெயர் சமூகத்தை அநுரகுமார திசநாயக்க, ஹரிணி, ரில்வின் போன்றோர் தனிப்பட வசப்படுத்தி வைத்துள்ளனர். உள்ளுரில் அபிவிருத்திக் குழுக்கள் என்ற பேரில் கிராமியக் கட்டமைப்புகளை விரிவாக்கி, விரைவுபடுத்தித்தன்னைப் பலப்படுத்துகிறது. வெளியே உள்ள எதிர்த்தரப்புகளின் பலவீனத்தையும் NPP தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது.

மக்கள்?

ஆம், மக்கள் எப்போதும் போல இருண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

— கருணாகரன் —

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி