உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப்
பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை விரிவாக ஆய்வு செய்யப் புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று புதன்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார்.
பேலியகொட பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் காலை 8.10 மணியளவில் அவர் பணிக்குச் சென்று கொண்டிருந்த போதே, விசேட அதிகாரிகள் குழுவினால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா? தெரிந்திருந்தும் அவற்றை உரிய தரப்பினருக்கு அறிவிக்
காமல் மறைத்தாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவின் 'சனல்-4' ஆவணப்படத்தில் அஸாத் மௌலானா வெளியிட்ட பரபரப்புத் தகவல்களின்
அடிப்படையில், ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பி
னர்களுடன் இணைந்து சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இத்தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில்
சி.ஐ.டியினர் சமர்ப்பித்த இரகசிய அறிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சுரேஷ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது வலைவீசியுள்ளது.