புதிய பொலிஸ் தேடுதல் அதிகாரங்கள் தொடர்பான சட்டமூலம்: முதல் முயற்சி தோல்வி; புதிய கதவைத் திறந்த அமைச்சர்!

புதிய பொலிஸ் தேடுதல் அதிகாரங்கள் தொடர்பான சட்டமூலம்: முதல் முயற்சி தோல்வி; புதிய கதவைத் திறந்த அமைச்சர்!

முதலாவது சட்டமூலத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கனடாவின் பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்குக் கூடுதல் தேடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில், புதிய 'சட்டபூர்வ அணுகல்' (lawful access) சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான கதவுகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி திறந்து வைத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் 'சட்டபூர்வ அணுகல்' தொடர்பான சட்டமூலமான 'பில் சி-2' (Bill C-2), அறிமுகமானபோதே பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தது.

இது அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் என்று சிவில் உரிமைக் குழுக்களும், தனிநபர் தனியுரிமை ஆர்வலர்களும் மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

சட்டபூர்வ அணுகல் என்பது, பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட மிக ஊடுருவக்கூடிய அதிகாரங்களில் ஒன்றாகும்.

இது சட்டரீதியான அனுமதியுடன், கனடியர்களின் மின்னணுத் தொடர்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைச் கைப்பற்ற அவர்களை அனுமதிக்கிறது.

கனடிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவை (CSIS) மற்றும் ஆர்.சி.எம்.பி (RCMP) உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள், டிஜிட்டல் சூழலில் சிக்கலான குற்ற வழக்குகளை விசாரிக்கும் போது, தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதில் கொள்கை மற்றும் அதிகாரக் குறைபாடுகள் பெரும் தடையாக இருப்பதாக நீண்டகாலமாகத் தெரிவித்து வருகின்றன.

"கனடாவில் ஒரு சட்டபூர்வ அணுகல் கட்டமைப்பு இருப்பது உறுதி, அதில் சந்தேகமில்லை" என்று ஆர்.சி.எம்.பி. தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலுக்குப் பிறகு அமைச்சர் ஆனந்தசங்கரி செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்களின் கவலைகள் மற்றும் சர்ச்சைகள்

'பில் சி-2' சட்டமூலத்தில் உள்ள 14 மற்றும் 15 ஆகிய பிரிவுகள் பெரும் எதிர்ப்பைப் பெற்றுள்ளன:

பிரிவு 14: விசாரணைகளுக்கு உதவும் என்ற சந்தேகம் இருந்தால், இணைய சேவை வழங்குநர்களிடம் உள்ள அடிப்படைச் சந்தாதாரர் தகவல்களை, பிடியாணை (warrant) இன்றி பாதுகாப்பு அமைப்புகள் அணுக அனுமதிக்கும்.

இதில் மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் மனநல மருத்துவர்களின் அலுவலகங்கள் போன்றவையும் அடங்கும். இது தனிநபர் தனியுரிமைக்கு விரோதமானது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

பிரிவு 15: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள், பொலிஸார் கோரும் போது தகவல்களைப் பகிர்வது மட்டுமின்றி, அந்தத் தகவல்களை எளிதாகப் பிரித்தெடுக்கத் தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இது கணினி அமைப்புகளில் 'பின்வாசல்களை' (back doors) உருவாக்கி, பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) போன்ற அமைப்புகள், தற்போதுள்ள சூழல் ஒரு "காட்டுமிராண்டித்தனமான" (Wild West) நிலையைப் போலவே இருப்பதாகக் கூறுகின்றன.

சட்டங்கள் இல்லாததால் தேசிய பாதுகாப்பு விசாரணைகள் ஆபத்தில் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். "இதனை நாங்கள் நேற்றே செய்திருக்க வேண்டும்" என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தனியுரிமை உரிமைகளையும், சட்ட அமலாக்க அமைப்புகளின் கடமைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க அரசாங்கம் உழைத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். "நாங்கள் இரண்டையும் செய்ய முடியும்" என்று அவர் கூறினார்.

தற்போதைய 'பில் சி-2' சட்டமூலத்தை முழுமையாக மாற்றியமைப்பதா அல்லது குறுகிய நோக்கம் கொண்ட புதிய சட்டமூலத்தைக் கொண்டுவருவதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

எது எப்படியிருப்பினும், ஒரு சட்டபூர்வ அணுகல் முறையை உருவாக்குவதில் உறுதியாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி