உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்வைக்கப்பட்ட PTA ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்வைக்கப்பட்ட PTA ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விசாரணையில் ஒரு சந்தேகநபருக்கு எதிராக சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே சட்டம் PTA என பரவலாக அறியப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமாகும். நீதிமன்றத்தால் அத்தகைய ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்ட ஒரு அரிய வழக்காக இது கருதப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரட்ண மாரசிங்க, சுஜீவ நிசங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால், நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (பெப்ரவரி 24) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் எட்டாவது சந்தேகநபரான அப்துல் மனாப் மொஹமட் சிரிதாஸின் வாக்குமூலமாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அந்த வாக்குமூலத்தின் சுயாதீனத்தன்மை குறித்தும் நீதிமன்றம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இலங்கை சட்டத்தின் கீழ் ஒரு சந்தேகநபருக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக்கூடிய ஒரே சந்தர்ப்பம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் மாத்திரமே இருக்கும் சூழலில், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் நம்பகத்தன்மையற்றது என விசேட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருப்பது இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சட்ட மைல்கல் என ஒரு முக்கிய சட்ட நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21, 2019 அன்று 268 பேரைக் கொன்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது இறந்துவிட்டார்.

தலைமை நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, கொழும்பு 7, புல்லர்ஸ் மாவத்தையின் மூலையில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் வாரத்தின் ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி