கனடா – இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை மீளமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தின் போது, கனடா பிரதமர் Mark Carney, இந்திய பிரதமர் Narendra Modi யை நேரில் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களை நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்ட சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக நிலவிய தூதரக பதற்றங்களைத் தாண்டி, இந்தியா – கனடா உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்க இரு தரப்பும் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின்மீது உள்ள பொருளாதார சார்பை குறைத்து, கனடாவின் வர்த்தக கூட்டாளிகளை பல்வகைப்படுத்தும் நோக்குடன் இந்த இந்தியப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கார்னியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பு, எதிர்காலத்தில் இந்தியா – கனடா உறவுகள் புதிய உச்சத்தை எட்டுவதற்கான அடித்தளமாக அமையும் என இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.